கணவனுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து ஆபத்தான முறையில் தீக்காயங்களை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் முற்படுத்தப்பட்ட குடும்பப் பெண்ணை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் காவல் பிரிவுக்கு உட்பட்ட புறநகர் பகுதியில் இந்தச் சம்பவம் கடந்த நான்காம் திகதி இடம்பெற்றுள்ளது.
குடும்பத்தலைவர் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டதால் ஆபத்தான வகையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் காவல்துறையினர், படுகாயங்களுக்கு உள்ளாகிய குடும்பத்தலைவரின் மனைவியை கைது செய்து நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினார்.
குடும்பப் பிரச்சினை காரணமாக சந்தேக நபரே கணவன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது”
சந்தேக நபரின் சட்டத்தரணி சமர்ப்பணம்
“சந்தேக நபரின் வீட்டுக்குள் பாம்பு ஒன்று வந்துள்ளது. அதனை விரட்ட சந்தேக நபர் பெட்ரோலை விசிறியுள்ளார்.
அது அங்கு ஏற்றப்பட்டிருந்த சாம்பிராணி குச்சியில் பட்டு தீ ஏற்பட்டுள்ளது. கணவன் மீது பெட்ரோலை ஊற்றும் எண்ணம் சந்தேக நபரிடம் இல்லை” என்று சந்தேக நபரின் சட்டத்தரணி சமர்ப்பணம் செய்தார்.
இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, சந்தேக நபரான பெண்ணை வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.