முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) வழங்கிய மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைமை பதவிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
புதிய நியமனங்கள் இடம்பெற்றதன் பின்னர் அது தொடர்பான வழிகாட்டல் வழங்கப்படும் என்று பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள், உள்ளுராட்சி அமைச்சின் செயலர் மாயாதுன்னே கூறியுள்ளார்.
இந்த கடிதம் மாவட்டச் செயலகங்களுக்கு நேற்று அனுப்பபட்டிருக்கின்றது. அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
முன்னாள் ஜனாதிபதி காலத்தில் வழங்கப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைமை நியமனங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
எனவே புதிய நியமனங்கள் வழங்கப்படும் வரை மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை நடத்துவதற்கான இயலுமை காணப்படுவதில்லை.
ஆகவே ஜனாதிபதியினால் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறியத்தருகிறேன்.
மேலும் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்படும் ஆலோசனைகளின் பிரகாரம் அவர்களின் எரிபொருள் செலவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.