இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதாலோ அல்லது அன்றைய தினத்தை துக்க தினமாக அறிவிப்பதாலோ பிரித்தானியா இலங்கைக்கு உதவிகளை வழங்கப்போவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.
வெளிநாட்டவர்களை கண்டதும் ஏற்படும் அடிமை உணர்வே ஜனாதிபதி ரணில் – ராஜபக்ஷவை இவ்வாறு சிந்திக்க வைப்பதாகவும் ஹிருணிகா சாடினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இரகசியமாக இராஜாங்க அமைச்சு
வலைப்பந்தாட்டம் மற்றும் கிரிக்கட் போட்டிகளில் ஆசிய கிண்ணத்தை வென்றமையை முழு நாடும் கொண்டாடிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இரகசியமாக பிரேமலால் ஜயசேகரவிற்கு இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர் ஒருவரை கொலை செய்தமை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கே இவ்வாறு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
இவருக்கு பதவியை வழங்கும் போது கொல்லப்பட்ட ஐ.தே.க. ஆதரவாளர் நினைவுக்கு வரவில்லையா? ஐக்கிய தேசிய கட்சியிலிருக்கும் போது கிடைக்காத வெற்றி பொதுஜன பெரமுனவுடன் இணைந்த போது ஜனாதிபதி ரணில் – ராஜபக்ஷவிற்கு கிடைத்துள்ளது. ஜனாதிபதி ரணில் நாட்டை ஆட்சி செய்கின்றார். அவரை ராஜபக்ஷாக்கள் ஆட்சி செய்கின்றனர்.
இவர் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி கிரிகைகளில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். அங்கு அவர் செல்வதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
இங்கிலாந்து மக்களை அதனை சிறிதளவும் கவனத்தில் கொள்ளப்போவதில்லை எனவும் கூறினார். 19 ஆம் திகதி துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமையினாலோ அல்லது ஜனாதிபதி பிரித்தானியா செல்வதாலோ எமக்கு எவ்வித உதவிகளும் கிடைக்கப் போவதில்லை எனவும், வெளிநாட்டவர்களை கண்டவுடன் ஏற்படும் அடிமை உணர்வே ஜனாதிபதியை இவ்வாறு சிந்திக்க வைக்கிறதாகவும் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.