எமது அரசாங்கம் இரசாயன உரத்தை தடை செய்து ஒரே நாளில் உரம் தொடர்பான கொள்கை மாற்றியமைத்ததால் நாட்டின் விவசாயத்துறை பாதிக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
தவறான தீர்மானத்தை அரசாங்கம் 6 மாத காலத்திற்குள் திருத்திக்கொண்டது. சீன உரக் கப்பல் விவகாரத்திற்கு நான் பொறுப்புக்கூற வேண்டிய தேவை கிடையாது. அதற்கான அவசியமும் இல்லை என முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthagamage) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் செவ்வாய்க்கிழமை (06-09-2022) இடம்பெற்ற பிள்ளைகள் மற்றும் தாய்மாரின் மந்தபோசணை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் உரம் தொடர்பில் கொள்கையை மாற்றியமைத்ததால் விவசாயத்துறை பாதிக்கப்பட்டது என எதிர் தரப்பின் உறுப்பினர் குறிப்பிட்டதை ஏற்றுக்கொள்கிறேன்.
உரம் தொடர்பான தவறான கொள்கை ஒரு போகத்தில் மாத்திரம் பாதிப்பை ஏற்படுத்தியது. தவறை திருத்திக் கொண்டோம். இரசயான உரம் தடை தொடர்பான தீர்மானம் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்டது.
இடைப்பட்ட காலத்திற்கு தேவையான இரசாயன உரம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. பெரும்போகத்தில் தான் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் தான் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
சேதன பசனை தொடர்பான திட்டம் தவறல்ல. அதனை ஒரே தடவையில் அமுல்படுத்தியது தான் தவறு. கட்டம் கட்டமாக செயற்படுத்தியிருக்கலாம்.
கடந்த காலங்களில் மக்களால் விமர்சிக்கப்படாத அரசியல்வாதி எவரும் கிடையாது. பிறரது குழந்ததைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க சென்றதால் எனது உருவ பொம்மையை மக்கள் எரித்தார்கள்.
விவசாயத்துறை அமைச்சராக பதவி பிரமாணம் செய்யும் போது உரம் தொடர்பான விடயம் எனக்கு பொறுப்பாக்கப்படவில்லை. விவசாயத்துறை திணைக்களம், விவசாய காப்புறுதி திணைக்களம் மாத்திரமே என்னிடமிருந்து. உரம் தொடர்பில் இரு இராஜாங்க அமைச்சர்கள் இருந்தார்கள்.
சேதன பசளை தொடர்பிலான கொள்கையை அரசாங்கம் முன்னெடுக்கும் போது இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தேன்.
ஆனால் அப்போது ஜனாதிபதி இரசாயன உர இறக்குமதி மற்றும் பாவனை மீதான தடைக்கான பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். இரசாயன உர இறக்குமதி செய்வதை தடை செய்யும் அமைச்சரவை பத்திரத்திற்கு அன்று எதிர்ப்பு தெரிவித்தேன்.
சேதன பசளை திட்டத்தை கட்டம் கட்டமாக செயற்படுத்துவோம் என்றேன். கலக்கமடைய வேண்டாம். சேதன பசளை திட்டத்திற்காக ஜனாதிபதி செயலணி நியமிக்கப்படும். இதற்காக இரு இராஜாங்க அமைச்சு நியமிக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சேதனை பசளை திட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலணி ஒரு நாள் கூட கூடவில்லை. சுகாதார மற்றும் சுற்றாடற் துறை அமைச்சும் சேதன பசளை திட்டம் குறித்து கவனம் செலுத்தவில்லை. நியமிக்கப்பட்ட இரு இராஜாங்க அமைச்சும் கருத்துரைக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்காக (Gotabaya Rajapaksa) கருத்துரைத்தேன்.
சீன கப்பல் விவகாரத்திற்கு நான் பொறுப்பு கூற வேண்டியதில்லை. அது எனது பொறுப்பல்ல. இவ்வளவு காலம் நான் இதனை குறிப்பிடவில்லை. சீன உர மனு கோரல் பகிர்ந்தளிப்பு தொடர்பான நவடிக்கைகளில் நான் தலையிடவில்லை. விவசாயத்துறை அமைச்சர் என்ற ரீதியில் சீன உரக் கப்பல் தொடர்பில் பரிசீலனை செய்தேன்.
சீன உரக் கப்பல் விவகாரத்தில் எவ்வித முறைகேடும் இடம்பெறவில்லை. சட்டமாதிபரின் ஆலோசனைக்கமையவே அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. விவசாய உரம் தொடர்பான தவறான கொள்கையை அரசாங்கம் ஆறு மாத காலத்திற்குள் திருத்திக் கொண்டது என்றார்.