கேஸ் விலையை குறைத்தாலும் உணவுப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது

0
370

எரிவாயு விலை இன்று (05) முதல் மீண்டும் குறைக்கப்பட்டாலும் பதப்படுத்தப்பட்ட உணவின் விலைகளை குறைக்க முடியாது என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நகர் பகுதியில் பொருட்களின் விலை குறைவாக இருந்தாலும் நகருக்கு வெளியே உள்ளவர்களுக்கு குறித்த நன்மை கிடைப்பதில்லை என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தொிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஒட்டுமொத்தமாக உணவுப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அசேல சம்பத்தின் கருத்துக்கள்  

“கேஸ் விலை குறைக்கப்பட்டது என்பதற்காக உணவுப் பொருட்களின் விலையை எந்த வகையிலும் குறைக்க மாட்டோம். ஏனென்றால் அன்று கேஸ் விலை குறைக்கப்பட்டபோது, ​​தேனீர் விலையை 30 ரூபாய் குறைப்பதாகச் சொன்னோம். உணவு விலையை 10 சதவீதத்தால் குறைப்பதாக கூறினோம். எனினும், நகரத்தின் பொருட்கள் விலைகளை கிராமத்துக்கும் வழங்க கூறினோம். ஆனால் அது நடக்கவில்லை.

உண்மையில் பருப்பு 410 ரூபாய். ஆனால் கிராமத்தில் இன்னும் 600 ரூபாய். 200 ரூபாய் அதிகம். அந்த 200 ரூபாய் கிராமத்தில் உள்ள ஹோட்டல்களை பாதிக்கிறது. இன்று அரை இறாத்தல் பாண் மற்றும் பருப்பு 250 ரூபாய். இது ஒரு தீவிர பிரச்சனையாகும்.

கேஸ் விலை குறைந்தாலும் உணவின் விலையை குறைக்க முடியாது. ஏனெனில் கேஸ் விலை மட்டும் அல்ல மற்ற பொருட்களின் விலையும் குறைந்துள்ளது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த விலைக்குறைப்பின் நன்மை கிராம மக்களுக்கும் கிடைக்க முறைமையொன்று உருவாக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.