சீன கப்பலின் வருகை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக இலங்கையின் சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாடோ (Harin Fernando) சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குச் சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங் 5 பயணத்திற்கு இந்தியா எதிர்ப்பு காட்டியது. இதனால் இலங்கையும் கூட முதலில் இந்தக் கப்பல் வருகையைத் தாமதப்படுத்தக் கேட்டுக் கொண்டது.
எனினும், இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. இலங்கை திடீரென கப்பலுக்கு அனுமதி அளித்தது. சீன கப்பல் நாளை வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருக்கும் ன எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா உளவு கப்பலால் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள்களைக் கண்காணிக்கும் ஆற்றல் கொண்டது. இதன் மூலம் இந்தியாவில் நடத்தப்படும் ஏவுகணை சோதனைகள் குறித்த தரவுகள் மிக எளிதாகச் சீனாவுக்குச் செல்லும் வாய்ப்புகள் உள்ளன.
இதன் காரணமாகச் சீன கப்பலின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து. மேலும், இலங்கையில் உள்ள நிலைமையைத் தொடர்ந்து உற்று நோக்கி வருவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே இலங்கை சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பாக அகமதாபாத் வந்துள்ள அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாடோ சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதாவது இலங்கையின் நிலைமையை இந்தியா புரிந்து கொள்ளும் என நம்புவதாகவும் இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றே நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “சீனா இலங்கையில் நிறைய முதலீடுகளைச் செய்துள்ளது. கடந்த காலங்களில் எங்கள் தேவைகளைப் புரிந்து கொண்டு இருந்தனர். அவர்கள் முதலீடு எங்கள் நிறைவேற்றுவதில் இது முக்கியமானதாக இருந்தது.
இலங்கை ஒரு சிறிய நாடு, இலங்கை அனைவருடனும் நல்ல நட்புறவைக் கொண்டுள்ளது. அதை இந்தியா புரிந்து கொள்ளும் என்பதில் உறுதியாக உள்ளேன். இந்தியா உடனும் கூட எங்களுக்கு மிகச் சிறப்பான உறவு உள்ளது.
இலங்கை அதிபர் மற்றும் வெளியுறவு அமைச்சர் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொடர்ந்து நல்ல உறவில் இருந்து வருகின்றனர்.
சீன உளவு கப்பல் விவகாரத்தில் இந்திய அதிகாரிகளின் நிலைப்பாடு எங்களுக்கும் புரிகிறது. அதேபோல எங்களின் நிலைமை அவர்கள் புரிந்து கொள்வார்களே என்றே நம்புகிறேன்.
இது இந்தியா – இலங்கை உறவில் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தாது என்றே நம்புகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
சீன உளவு கப்பல் நாளை, அதாவது ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி அங்குச் சென்ற உளவு கப்பல், எரிபொருள் மற்றும் உணவை நிரப்பவே சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்படும்போது, எவ்வித ஆய்வுப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் ஏவுகணை டிராக்கிங் கருவிகளை ஆப் செய்து இருக்க வேண்டும் என்றும் இலங்கை கேட்டுக் கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.