மேற்கு லண்டனை சேர்ந்த நபருக்கு சிரியாவில் பணயக்கைதிகள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட எட்டு குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
34 வயதான எல் ஷஃபீ எல்ஷேக் சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாத குழுவுடன் இணைந்து கைதிகளை படுகொலை செய்வது, சித்திரவதைக்கு உட்படுத்துவது, தாக்குதலில் ஈடுபடுவது, பணயக்கைதிகளாக சிறைபிடிப்பது உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை வர்ஜீனியா, அமெரிக்காவில் தீர்ப்பு அறிவித்தபோது உணர்ச்சியற்று காணப்பட்ட எல் ஷஃபீ எல்ஷேக், தீர்ப்பை வாசித்தவரை மட்டும் கண்கொட்டாமல் பார்த்தபடி காணப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜரான ராஜ் பரேக் என்பவர் தெரிவிக்கையில், நமது நாட்டின் வரலாற்றிலும், நமது நீதி அமைப்பிலும் இது ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயமாகும் என்றார்.
எல் ஷஃபீ எல்ஷேக் உட்பட்ட நான்கு பிரித்தானியர்கள் இணைந்த ஐ.எஸ் குழுவால் மொத்தம் 27 பணயக்கைதிகள் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
2018ல் எல்ஷெய்க் மற்றும் கோட்டே ஆகிய இருவரும் துருக்கிக்கு தப்பிச் செல்ல முயன்றபோது, அமெரிக்க ஆதரவு சிரிய ஜனநாயகப் படைகள் கைது செய்தனர். அமெரிக்க பணயக்கைதிகளை சித்திரவதை செய்து கொலை செய்ததற்காக கோட்டே ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்கு லண்டனைச் சேர்ந்த டேவிஸ், துருக்கியால் இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் ஆகஸ்ட் 10 புதன்கிழமை லூடன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இந்த நால்வர் குழுவில் முக்கியமானவர் என கருதப்படும் ஜிஹாதி ஜான் என்ற எம்வாசி 2015ல் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.