முக்கியமான தருணங்களில் வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாக இருக்குமாறு பொதுமக்களிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுள்ளது.
வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
“காலி முகத்திடலில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் சட்டத்தரணிகள் சங்கம் மேற்கொண்டு வருகிறது. அந்த மக்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்.
வன்முறையை அனைவரும் தவிர்க்க வேண்டும். துன்புறுத்தல், காயம் ஏற்படுத்துதல், பொது சொத்து மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்துதல் முற்றிலும் சட்டவிரோதமானது. அவற்றை அங்கீகரிக்கவே முடியாது.
இது தொடர்பாக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். துன்புறுத்தல் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முழுமையாக ஆதரவளிக்கிறது” என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.