எம்.பிக்களின் கனவில் மண்ணைப்போட்ட சபாநாயகர்!

0
495

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 101 பேருக்கு பத்தரமுல்ல வியத்புர மாடி வீட்டுத் தொகுதியிலிருந்து வழங்கப்படவிருந்த சொகுசு வீடுகள் திட்டத்தை உடனடியாக நிறுத்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணிப்புரையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு இத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

பத்தரமுல்ல வியத்புர வீடமைப்பு தொகுதி நகர அபிவிருத்தி அதிகார சபை நடத்தப்பட்டு வருகிறது. வீடுகளைக் கொள்வனவு செய்வதற்கு இலகு வங்கி கடன் பெற்றுக்கொடுக்க இத்திட்டத்தின்கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்ஒருவருக்கு ஒரு கோடி ரூபா அல்லது அதற்கு அதிகமான கடனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில் இத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர்மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகின்றது.