13 வயது சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்தி: 10 இலட்சம் ரூபா கேட்டு மிரட்டி வந்த இரு சந்தேக நபர்கள் கைது!

0
382

13 வயது சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்தி வீடியோ ஒன்றினை காட்டி 10 இலட்சம் ரூபா கப்பம் கேட்டு நீண்டகாலமாக மிரட்டி வந்த இரு சந்தேக நபர்கள் தலைமறைவாக இருந்த நிலையில் கல்முனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 2022.01.05 அன்று சிறுமியின் தாயாரினால் அம்பாறை மாவட்டம் கல்முனை காவல்துறை பிரிவில் உள்ள சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 13 வயதான தனது மகளை 3 சந்தேக நபர்கள்  காணொளி ஒன்றினை வைத்து கப்பம் கேட்பதாக கல்முனை காவல் நிலையத்திற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய காவல்துறையினர் 3 சந்தேக நபர்களையும் அடையாளம் கண்ட நிலையில் தேடுதல் மேற்கொண்டு வந்தனர்.

எனினும் சந்தேக நபர்களில் ஒருவரான சாய்ந்தமருதினை சேர்ந்தவர் டுபாய் நாட்டிற்கு தப்பி சென்ற நிலையில் ஏனைய சந்தேக நபர்களில் கப்பம் கோரியவரான மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபர் கல்முனை பகுதி உணவகமொன்றில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பின்னர் கைதானவரின் தகவலுக்கமைய இச்சம்பவத்திற்கு உடந்தையாக செயற்பட்ட மற்றுமொரு 31 வயதுடைய சந்தேக நபர் சாய்ந்தமருது பகுதியில் வைத்து கைதானார்.

குறித்த இரு சந்தேக நபர்களையும் காவல்துறை விசேட பிரிவின் தகவலுக்கமைய கல்முனை தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் துரிதமாக செயற்பட்ட கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம காவல்துறை பரிசோதகருமான அலியார் றபீக் தலைமை குழுவினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் வெளிநாட்டிற்கு தப்பி சென்ற சந்தேக நபரினை கைது செய்ய நீதிமன்ற நடவடிக்கை ஊடாக சர்வதேச பிடியாணை உத்தரவினை பெறுவதற்கு எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.