அகதிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 35 பேர் பலி

0
563

லிபியா நாட்டின் மேற்கு பகுதியில் சப்ரதா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் அருகே கடலில் சென்று கொண்டிருந்த மரப்படகு ஒன்று எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இந்த படகில் உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருந்தனர்.

இந்த சம்பவம்  குறித்த தகவல் அறிந்த லிபியா கடலோர காவல்படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதற்குள் படகில் பயணித்த பெண்கள், சிறுவர்கள்  என  35 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதே சமயத்தில் நீரில் தத்தளித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 6 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர்.

இந்த விபத்தில் மேலும் பலர் மாயமாகி உள்ளதாகவும் அவர்களின் கதி என்ன? என்பதும் இன்னும் தெரியவில்லை என்று மீட்புக்கழுவினர் கூறியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு முன்னதாக கடந்த 12-ம் தேதி லிபியாவின் சோர்மன் என்ற நகரில் அகதிகள் படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.