உக்ரைனுக்கு ஆயுதங்களை தர மறுத்த ஹங்கேரி!

0
301

உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. மேலும் ரஷ்ய துருப்புகளின் தாக்குதலுக்கு எதிராக உக்ரைன் இராணுவமும் பதிலடி கொடுத்து வருகின்றது.

உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றவேண்டும் என்ற முனைப்புடன்  மும்முரமாக ரஷ்ய துருப்புகள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அளித்து வரும் நிலையில் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் (Viktor Orbán) ஆயுதம் தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  

ரஷ்யாவை எதிர்த்து போரிட ஆயுதங்கள் வழங்க வேண்டும், கூடவே ரஷியா மீது பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடான ஹங்கேரிக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) உணர்வுப்பூர்வமான வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இருப்பினும், அவரது வேண்டுகோளை ஏற்க அந்த நாடு மறுத்து விட்டது. இதுபற்றி அந்த நாட்டின் பிரதமர் விக்டர் ஆர்பன் நேற்று வியாழக்கிழ்மை (24-03-2022) சமூக ஊடகம் ஒன்றில் காணொளியில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “ உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் (Volodymyr Zelenskyy) வேண்டுகோள்கள், ஹங்கேரியின் நலன்களுக்கு எதிரானவை. ரஷ்ய எரிசக்திக்கு தடை போட்டால் அது எங்கள் நாட்டின் பொருளாதாரத்தை மந்தமாக்கும்” என கூறியுள்ளார்.

மேலும், உக்ரைன் எல்லையில் உள்ள ஹங்கேரி, அந்த நாட்டுக்கு போரிட ஆயுதங்கள் தர மறுத்திருப்பது சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.