13 பேர் பலி, களுகங்கையின் நீர்மட்டம் உயர்வு, கடும் மழை தொடரும்

0
1019
Over 84,000 affected floods landslides

(Over 84,000 affected floods landslides)
நாட்டின் பெரும்பாளான பகுதிகளில் இன்றைய தினமும் கடும்மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

இதுதொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள வளிமண்டளவியல் திணைக்களம்,

மேல், சப்ரகமுவ, வடமேல் ஆகிய மாகாணங்களில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரையிலான மழை வீச்சி பதிவாகும்.

அதேநேரம் காங்கேசந்துறை முதல் புத்தளம், கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்பில் கடுமையான மழைபெய்யும்.

இதேவேளை, நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 18 மாவட்டங்களில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 840 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 13 பேர் இதுவரையில் மரணித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் 229 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், தொடரும் சீரற்ற வானிலை காரணமாக களுகங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்து செல்வதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதன்காரணமாக, களுத்துறை, தொடங்கொட, மில்லனிய, மதுராவல, ஹொரணை, புளத்சிங்கள, இங்கிரிய, பாலிந்தநுவர, கிரியெல்ல, குருவிட்ட, எலபாத மற்றும் ரத்தினபுரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாழ் நில பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக குறித்த பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இந்த அறிவுறுத்தலை விடுத்திருந்தது.

அத்துடன், கண்டி, மாத்தளை, பதுளை, குருணாகல், கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மழை காரணமாக புத்தளம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலேயே அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

புத்தளம் மாவட்டத்தில் அனைத்து சிறிய குளங்கள் அனைத்தினதும் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் மஹவெல, மாதம்பை, நாத்தாண்டியா மற்றும் ஆராச்சிகட்டுவ ஆகிய பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தற்போது கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களிலும் சில இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

களனி கங்கை பெருக்கெடுத்திருப்பதன் காரணமாக, பியகம, மல்வானை பகுதியில் பாதைகளும், தாழ்நிலப் பகுதிகள் பலவற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிக மழையின் காரணமாக மலையகத்திலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காசல் ரீ, கொத்மலை ஓயா, கெனியன், விமலசுரேந்திர ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்ட்டம் அதிகரித்துள்ளதுடன், கெசல்கமுவ ஓயாவும் பெருக்கெடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

ஹட்டன், பொகவந்தலாவை, கொட்டகலை, தலவாக்கலை, அக்கரபத்தனை, டயகம, கினிகத்தேனை, நுவரெலியா ஆகிய பகுதிகளிலும் பதுளை மாவட்டத்தில் ஹப்புத்தளை தெமோதரைஉள்ளிட்ட பகுதிகளிலும் மண்சரிவு அபாயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பல இடங்களில் பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால், வாகனசாரதிகள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், யாழ்ப்பாணம் – கீரிமலை நகுலேஸ்வரன் ஆலய நுழைவாயிற் கோபுரத்தின் மீது மின்னல் தாக்கியதில், கோபுரத்தின் சிலை ஒன்று பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் நேற்றும் யாழ்ப்பாணத்தில் இரண்டு இடங்களில் மின்னல் தாக்கியத்தில் இரண்டுத் தென்னை மரங்களில் தீப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று வடக்கில் கடுமையான மழைபெய்யும் என்பதோடு மக்கள் மிகவும் அவதானமாக இருக்கமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை