கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இன்னும் பல மனித எச்சங்கள் இருக்கலாம் – சுமந்திரன்

0
187

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் வீதிக்கு குறுக்காகவும், வீதிக்கு அடியிலும் கூட சில வேளை மனித எச்சங்கள் இருக்க கூடும் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது என ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி ஆரம்பிக்கும் இடத்தினை இன்றைய தினம் பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது மீளவும் இன்று காலை ஆரம்பமாகி உள்ளது. தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியை கொண்டு இன்னும் இரண்டு வாரங்களுக்கு அகழ்வு பணிகளை மேற்கொள்ள முடியும் எனக் கூறியிருக்கிறார்கள்.

பல்வேறு தளங்களில் உடல்கள் காணப்படுகின்ற காரணத்தினால் நீண்ட காலமாக அகழ்வை செய்வதற்கான தேவை ஏற்பட்டிருப்பதனை உணர்ந்திருக்கின்றார்கள். வீதிக்கு குறுக்காகவும, வீதிக்கு அடியிலும் கூட சில வேளை மனித எச்சங்கள் இருக்க கூடும் என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கின்றது.

அதனால் இதனை பரிசீலித்து நீண்ட நாட்களாக செய்யப்பட வேண்டிய செயன்முறை என்ற அடிப்படையில் அதற்கான நிதியை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து, அரசாங்க அதிபருக்கு விடுவிப்பதற்கான முயற்சிகள் இன்றிலிருந்து ஆரம்பமாக இருப்பதாகவும் அந்த நிதி விடுவிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கின்றது. இந்த செயற்பாடுகள் தற்போது சரியான முறையில் நடைபெறுகின்றன.

ஒவ்வொரு எலும்பு கூடுகளும் கை, கால், உடம்பு, தலை அனைத்தும் பொருந்தக்கூடிய வண்ணமாக எடுக்கப்படுகின்ற காரணத்தினால்தான் நீண்ட நேரம் இதற்கு செல்வாகின்றது. எலும்பு கூடுகளை உடையாமல் கவனமாக எடுக்கப்பட வேண்டிய தேவையும் இருக்கின்றது.

ஒவ்வொரு கட்டமாக அகழ்ந்து தற்போது 17 பேரின் எலும்பு கூடுகள் முழுமையாக எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இதனை விட கூடுதலான எண்ணிக்கையில் எலும்பு கூடுகள் இருக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது. அவர்களுடைய சீருடைகள் மற்றும் வேறு பல பொருட்களும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.

இவர்கள் எந்த காலப் பகுதியில் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை என்பதனையும் சில பரிசோதனைகளின் பின்னர் அறியக்கூடியதாக இருக்கும். அதற்கு சில நாட்கள் எடுக்கும்.” என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.