‘2024 பட்ஜெட்’ டலஸ் அணி எதிர்ப்பு; ராஜித திரிசங்கு நிலையில்!

0
149

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது இலங்கையின் 78 ஆவது வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் நவம்பர் 13ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

மறுநாள் ஆரம்பமான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று 7ஆவது நாளாக இடம்பெறுவதுடன் இன்று மாலை வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

இதேவேளை குழுநிலை அல்லது மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை (நவ.22) முதல் டிசம்பர் 13ஆம் திகதிவரை நடைபெற உள்ளது. மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்றைய தினம் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

2024 நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டப் பற்றாக்குறை ரூ.2,851 பில்லியன் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 9.1 சதவீதமாக உள்ளது.

மொத்த உத்தேச வருவாய் ரூ. 4,107 பில்லியனாகவும் (வரி வருவாய் ரூ. 3,820 பில்லியன் உட்பட) அடுத்த ஆண்டுக்கான மொத்த செலவினம் ரூ. 6,978 பில்லியன் ரூபாவாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 33 சதவீதம் செலவீனங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் அதிக பெரும்பான்மையை காட்ட முடியாத நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிக பெரும்பான்மையை பெற அரசாங்கம் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. என்றாலும் கடந்த வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக பெற்றுக் கொண்ட வாக்குகளையும் விட இம்முறை குறைவான வாக்குகளையே அரசாங்கம் பெற்றுக் கொள்ளும் என அரசின் தகவல் அறியும் வட்டாரங்களில் முறிய முடிகிறது.

ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கடுமையான பிளவுகள் காரணமாக பல தரப்பினர் பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்கி வருகின்றனர்.

டளஸ் அணியும் இம்முறை வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக் ஆலோசனைகளை நடத்தியுள்ளது. எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியும் வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க உள்ளன.

இதேவேளை எதிர்கட்சியின் சில எம்.பிகளிடம் வரவு – செலவுத் திட்டத்துக்கான ஆதரவை அரசாங்கம் ரகசியமாக கோரியுள்ள போதிலும் அதற்கு ஆதரவான சமிஞ்சை இன்னமும் முழுமையாக கிடைக்கவிலலை.

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன வரவு – செலவுத் திட்டத்தை ஆதரக்க கூடும் அல்லது வாக்கெடுப்பில் இருந்து விலகியிருக்க கூடுமென எதிர்க்கட்சிகளில் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

இதேவேளை ராஜித சேனாரட்ன எதிர்கட்சியின் தீர்மானத்தின் பிரகாரம் வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்காவிடின் அவருக்கு கதவுகளை மூடுவதற்கான பேச்சுவார்த்தைகளை ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகிறது.