தமிழர்கள் ஒன்றுபடுவதை தீய சக்திகள் விரும்பவில்லை

0
631
Mullivaikkal Remembrance Day comments Jaffna University Student Union

(Mullivaikkal Remembrance Day comments Jaffna University Student Union)
தமிழர்கள் ஒன்றுபடுவதை விரும்பாத தீய சக்திகள், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் குறித்து முதலமைச்சரிடமும் மாகாண சபையினரிடமும் தவறாகக் கூறியதாலோ என்னவோ மாணவர் ஒன்றியத்தின் உள்ளார்ந்தக் கோரிக்கையை அவர்கள் புரிந்துகொள்ளத் தவறியுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கிருஸ்ணமேனன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு விடயத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடு மனவருத்தமளிப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.

முதலமைச்சரின் கருத்துக்கு பதலளிக்கும் வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முள்ளிவாய்க்கால் பேரவலமானது வெறுமனே வடக்கு மாகாணம் தழுவியதாக இல்லை. வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் 8 மாவட்ட மக்களையும் அணைத்துக் கொண்டு செய்யவேண்டிய நினைவேந்தல் நிகழ்வாகும்.

அந்தவகையில் நாம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு கடந்த மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து பகிரங்க அழைப்பு விடுத்திருந்தோம். அனைவரையும் ஒன்றிணையுமாறு அந்த அழைப்பை விடுத்திருந்தோம்.

கடந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் நான்கு தரப்புகள் நினைவேந்தல் நிகழ்வை நடத்தியிருந்தார். அந்த தரப்புகளை அழைத்து நாம் பேச்சு நடத்தியிருந்தோம்.

‘இந்த ஆண்டு பிரிந்து நின்று நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தக் கூடாது. ஒன்றிணைந்து ஒரே நிகழ்வாக நடத்துவோம். அதற்கு பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் நடுநிலையாளராக மாணவர் சக்தியாக நின்று ஒழுங்குபடுத்துகின்றோம் என்றும் அந்தத் தரப்புகளிடம் வலியுறுத்தினோம்.

அவர்களில் முக்கியமாக கடந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னின்று நடத்திய வடக்கு மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரனை சந்தித்து பேசியிருந்தோம்.

‘அனைவரும் ஒன்றிணைந்து நினைவேந்தலை செய்தால் எனக்கு முழுமையான நிறைவு தம்பிமார்’ என்று அவர் எம்மிடம் தெரிவித்தார்.

அந்த நம்பிக்கையோடு நாம் முதலமைச்சரை சந்திக்க அணுகிய போது, அவர் நாட்டில் இருக்கவில்லை.

அதனால் ஒரு மாத காலத்துக்குள் இந்தப் பேரழுச்சியை ஒழுங்கமைக்க வேண்டும் என்ற பெரும் சுமையுடன் பணியாற்றினோம்.

முதலமைச்சர் நாடு திரும்பியதும் அவசர அவசரமாக நாம் சந்தித்தோம். அவருடன் சுமார் 30 நிமிடங்கள் கலந்துரையாடினோம்.

எமது நோக்கம் என்ன – எதற்காக நாம் இந்தப் பணியை முன்னெடுக்கின்றோம்? என்பதை அவரிடம் எடுத்து கூறியிருந்தோம்.

‘முக்கியமாக அரசியல் நோக்கமில்லை. உங்களுடைய பதவிக்காலத்தில் இந்த நிகழ்வை மக்கள் மயப்படுத்துங்கள். மக்களால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த நிகழ்வில் அவர்களின் பிரதிநிதியாக – முதலமைச்சராக நீங்கள் பங்கேற்பதுதான் சாலப்பொருத்தமாக இருக்கும்’ என்பதையும் அவரிடம் எடுத்துக் கூறியிருந்தோம்.

அரசியல் சார்ந்த சபையான வடக்கு மாகாண சபை நினைவேந்தலை ஒழுங்கமைத்தால் அதனை ஆட்சி செய்யும் கட்சியின் அரசியல் நலனுக்காக செய்யப்படுவதாக வெளியே உள்ள தரப்புகள் கொள்கை ரீதியாக உடன்படமாட்டார்கள்.

ஆனால் மாணவர் சக்தி மக்களுடன் இணைந்து முன்னெடுக்கும் போது, அனைத்து தரப்புகளும் தமிழர் ஒற்றுமைக்காக ஒரணியில் நிற்பார்கள். அது மாபெரும் சக்தியாக சர்வதேசத்துக்கு செய்தியைச் சொல்லும் என்ற விடயத்தின் அடிப்படையிலேயே நாம் முக்கிய பங்காற்றினோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Mullivaikkal Remembrance Day comments Jaffna University Student Union