ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல், அதற்கு ஈரான் கொடுத்துவரும் பதிலடியைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் நிலவிவரும் நிலையில், போரில் எங்கள் கூட்டாளர் நாடுகளுடன் இணைந்து நிற்போம் என கனடா பிரதமர் கூறியுள்ள விடயம் கவனம் ஈர்த்துள்ளது.
மத்திய கிழக்கில் போர்ச்சூழல் மும்முரமாகிவரும் நிலையில், போரில் தனது நாட்டின் ராணுவம் பங்கேற்கும் நிலை ஏற்படலாம் என கனேடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
கனடா பிரதமர் மார்க் கார்னி அவுஸ்திரேலியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவர் அவுஸ்திரேலிய பிரதமரான அந்தோனி அல்பானீஸுடன் இணைந்து ஊடகவியலாளர்களை சந்தித்தார். அப்போது கனடா பிரதமர் கார்னியிடம், ஈரான் போரில் கனடா ஈடுபடும் சூழ்நிலை உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த பிரதமர் கார்னி, இந்தக் கேள்வி ஒரு கருதுகோளாக (hypothetical question) இருக்கும் பட்சத்தில், போரில் பங்கேற்பதை ஒருபோதும் வெளிப்படையாக நிராகரிக்க முடியாது என்றார். மேலும் நாங்கள் எங்கள் கூட்டாளிகளுக்கு ஆதரவாக நிற்போம் என்றும், எப்போதும் கனேடியர்களைப் பாதுகாப்போம் என்றும் கூறினார் பிரதமர் கார்னி.
இதில் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், கனடா பிரதமர் கார்னி அவுஸ்திரேலியா முதலான நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதே அமெரிக்காவை சார்ந்திருப்பதை குறைக்கவேண்டும் என வலியுறுத்துவதற்காகத்தான்!



