லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை அணி முன்னேறியுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2:0 என்ற கண்கில் முன்னிலையில் இருந்த போதிலும், இறுதிப் போட்டியில் இலங்கை எட்டு விக்கெட்டுகளால் வெற்றியீட்டி அதிர்ச்சி அளித்தனர்.
இந்த வெற்றியினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை 42.857% புள்ளிகளுடன் இங்கிலாந்தை பின் தள்ளி 5 ஆம் இடத்துக்கு சென்றது.
தற்சமயம் ஐசிசி 2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இலங்கை 7 போட்டிகளில் மூன்றில் வெற்றி கொண்டுள்ளது. அதேசமயம் இங்கிலாந்து 16 டெஸ்ட் போட்டிகளில் எட்டு வெற்றிகளுடன் 42.187% உடன் வெறும் தசம புள்ளிகளுக்குக் கீழே உள்ளது.
மூன்றாவது போட்டியில் 219 ஓட்டங்களை சேஸிங் செய்த இலங்கை போட்டியின் நான்காம் நாளில் 2 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கினை அடைந்தது.
இலங்கை சார்பில் அதிகபடியாக பத்தும் நிஸ்ஸங்க 124 பந்துகளில் 43 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கலாக 127 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றார்.
மறு முனையில் வெற்றியின் பாதைக்கு அஞ்சலோ மெத்தியூஸ், நிஸ்ஸங்கவுடன் இணைந்து குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.
இது ஒரு தசாப்தத்தில் இங்கிலாந்தில் இலங்கையின் முதல் டெஸ்ட் வெற்றியாகும். மேலும் ஒட்டுமொத்தமாக நான்காவது வெற்றியாகும், ஜூன் 2014 இல் லீட்ஸில் நடந்த டெஸ்டில் இலங்கை கடைசி இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இலங்கைக்கு கடினமான போட்டிகள் எஞ்சியுள்ளன. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு உள்நாட்டுத் தொடர்கள் தென்னாப்பிரிக்காவிற்கான சுற்றுப் பயணமும் உள்ளன.
இதற்கிடையில் இங்கிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட தொடருக்காக பாகிஸ்தானுக்குச் செல்கிறது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியை முடிக்க நியூசிலாந்துக்கு மற்றொரு சுற்றுப் பயணத்தையும் மேற்கொள்ளும்.
