2022 பீஃபா உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ஜென்டீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் மோதும் இன்றைய போட்டி இரவு 8.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளும் தலா இரண்டு தடவைகள் உலக கிண்ணத்தை வென்றுள்ளன.
ஆர்ஜென்டீனா அணி 1978 மற்றும் 1986ஆம் ஆண்டும், பிரான்ஸ் அணி 1998 மற்றும் 2018ஆம் ஆண்டும் கிண்ணத்தை வென்றுள்ளன.
ஆர்ஜென்டீனா அணி 36 ஆண்டுகளுக்கு பின்னர் உலக கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்பில் உள்ளது.

அந்த அணி 6 ஆவது முறையாக உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடரின் இறுதி போட்டியில் விளையாடுகிறது.
அதேநேரம் பிரான்ஸ் அணி 4 ஆவது தடவையாக இறுதி போட்டியில் விளையாடுகிறது. இன்றைய போட்டி தமது இறுதி உலக கிண்ண போட்டி என ஆர்ஜென்டீனா அணியின் லியோனல் மெஸ்ஸி அறிவித்துள்ளார்.
இதேவேளை, உலகக் கிண்ண கால்பந்து தொடரில், குரோஸியா அணி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

மொரோக்கோ அணியுடனான நேற்றைய போட்டியில் குரோஸிய அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
குரோஸியா அணியின் ஜோஸ்கோ கார்டியோல் போட்டியின் 7 ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றையும் மிஸ்லாவ் ஓர்சிக் 42வது நிமிடத்தில் ஒன்றையும் பெற்றனர்.
அதேநேரம், மொரோக்கோ அணியின் அக்ரஃப் டரி 9ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றை பெற்றார்.