பௌத்தத்திற்காக நிற்பது இனவாதம் அல்ல – நாமல் ராஜபக்ச

0
21

புத்த தர்மம், புத்த சாசனம் மற்றும் மகா சங்கத்தை பாதுகாப்பது இனவாதச் செயல் அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையர்களில் பெரும்பாலோர் பௌத்தர்கள் என்றும், பௌத்த கலாச்சாரம் மற்றும் தத்துவத்தைப் பாதுகாப்பது நாட்டில் உள்ள அனைத்து மதங்களுக்கும் நன்மை பயக்கும் என்றும் எடுத்துரைத்தார்.

“இந்த நாடு பௌத்த அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டது என்று நான் நம்புகிறேன். பௌத்தத்தில் வேரூன்றிய ஒரு தேசம் அனைத்து மதங்களையும் பாதுகாக்க முடியும்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அதனால்தான் நாங்கள் பயப்படவில்லை. நான் ஒரு சிங்கள பௌத்தன், மற்ற கலாச்சாரங்களைப் பாதுகாக்கவும் நான் பாடுபடுகிறேன். நான் என் மதத்தை நம்புவதால் என் கலாச்சாரத்தைப் பாதுகாக்க முடிந்தது. மதத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் மற்றொருவரின் மொழி, மதம் அல்லது கலாச்சாரத்தைப் பாதுகாக்க முடியாது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.