அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை திரும்பிய நிலையில் கேகாலை பகுதியில் மனைவியின் இறுதி சடங்கின் போது கணவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
77 வயதான குணதாச அதிகாரி ஆராச்சி என்ற கேகாலை புனித மேரி பெண்கள் கல்லூரியில் ஆசிரியரும், 76 தலதா விஜேரத்ன என்ற எழுத்தாளருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இருவரும் இளம் வயதிலேயே காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் தம்பதி அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் மனைவியின் உடல்நிலை பாதிப்பு காரணமாக இருவரும் இலங்கைக்குத் திரும்பினர்.
எனினும் கடந்த 31ஆம் திகதி மனைவி உயிரிழந்தார். இதனையடுத்து 2 ஆம் திகதி மாலை அவரது உடல் தகனம் செய்யப்பட்டபோது கணவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
மனைவியின் பிரிவால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மதச் சடங்குகளை முடித்துவிட்டு தகனத்திற்கு செல்லாமல் வீடு திரும்பிய அவர் மனைவியின் உடல் தீயில் எரிந்து கொண்டிருந்தபோது மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
அவரது இறுதிச் சடங்கு நேற்று கேகாலை நடைபெற்ற நிலையில் மரணத்திலும் பிரிய விரும்பாத தம்பதியின் உயிரிழப்பு உறவினர்கள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.



