இலங்கைப் பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை கொடுமைப்படுத்தும் நடைமுறையை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) கடுமையாக கண்டித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இந்த விவகாரம் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
புதிய பல்கலை மாணவர்களை கொடுமைபடுத்துவது ஒரு காலாவதியான மற்றும் குற்றவியல் நடைமுறை என்றும் நாட்டின் உயர்கல்வி முறையிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அதன்போது பேராதனை பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்புகளுடன் முன்பு நடத்திய கலந்துரையாடல்களை நினைவு கூர்ந்த அவர் “மற்றொரு மாணவரை துன்புறுத்தவோ அல்லது தீங்கு செய்யவோ யாருக்கும் உரிமை இல்லை. மூத்தவராக இருப்பது ஒரு புதிய மாணவரை துஷ்பிரயோகம் செய்ய அதிகாரம் அளிக்காது” என்று கூறி தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளார்.
சபரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் தொடர்பான துயர சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்ட ஜனாதிபதி அநுர இந்த சம்பவம் கடுமையான விமர்சனங்களை தூண்டியுள்ளதாகவும், அது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் சம்பந்தப்பட்ட மாணவர் முதலாமாண்டு மாணவர் அல்ல இரண்டாம் ஆண்டு மாணவர் என்பது சம்பவத்தின் தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பகிடிவதை என்பது வெறும் ஒழுக்காற்று பிரச்சினை மட்டுமல்ல குற்றவியல் பிரச்சினை என்றும் ஜனாதிபதி திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி இந்த குற்றங்களை குற்றவியல் சட்டத்தின் கீழ் கையாள வேண்டும் என்றும் அது ஒரு பல்கலைக்கழகத்திலோ அல்லது வேறு எந்த நிறுவனத்திலோ நடந்தாலும் சட்டம் பொருந்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.