ஜம்மு காஷ்மீர் முதல்வராக ஒமர் இன்று பதவியேற்பு: குடியரசு தலைவர் ஆட்சி இனி இல்லை

0
177

ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தின் முதலாவது முதலமைச்சராக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா இன்று பதிவியேற்க உள்ளார்.

ஸ்ரீ நகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் மாநாட்டு அரங்கில் இன்று காலை 11.30க்கு நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஒமருக்கு பதவிப் பிரமாணமும் இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் சுமார் 10 வருடங்களுக்குப் பின்னர் பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. 2019 இல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் பின்னர் ஜம்மு காஷ்மீர் – லடாக் என இரு பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் பேரவைத் தேர்தல் இதுவாகும்.

கடந்த 5 வருடங்களாக இங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியே இடம்பெற்றது. தற்போது மக்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பதியேற்கும் விதமாக குடியரசுத் தலைவர் ஆட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை திரும்பப் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.