மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த கொட்டாஞ்சேனை மாணவி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0
114

கொட்டாஞ்சேனை (Kotahena) பகுதியில் 6 வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த டில்ஷி அம்ஷிகா என்ற 15 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் சாட்சி விசாரணைகள் இன்று (15) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

கொழும்பு பதில் நீதவான் சம்பத் ஜெயவர்தன முன்னிலையில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. கொட்டாஞ்சேனை பொலிஸாரின் நடவடிக்கையின் கீழ் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

இதன்போது முதலாவதாக சிறுமி உயிரிழந்த அடுக்குமாடி குடியிருப்பின் தலைவரிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இறந்த சிறுமியின் தாயாரின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

பின்னர் மேலும் பலரின் சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையை 22ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதவான் அன்றைய தினம் சிறுமியின் தாயாரிடமிருந்து மேலதிக சாட்சியங்களைப் பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி 6 வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த டில்ஷி அம்ஷிகா என்ற 15 வயது மாணவியின் மரணம் தொடர்பில் ஆராய 10 பேரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – கொட்டாஞ்சேனையில் கடந்த 29ம் திகதி பாடசாலை மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் நாட்டில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

உயிரை மாய்த்த மாணவி பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரான ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை (National Child Protection Authority) தனி விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அதிகாரசபையின் தலைவர் பிரீத்தி இனோகா ரணசிங்க இதற்காக பத்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.