அனுர குமாரவுக்கு கறைபடிந்த கடந்த காலம் உண்டு: ஹிருணிகா பிரேமசந்திர விமர்சனம்

0
268

அனுர குமார திஸாநாயக்கவுக்கு பயங்கரமான, கறைபடிந்த ஒரு கடந்த காலம் உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் ஹரிணி அமரசூரியவுக்கு சிறந்ததொரு அரசியல் பயணம் உள்ளதால் அவர் ஜனாதிபதி வேட்பாளருக்கு பொருத்தமானவர் எனவும் ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக வேண்டியவர் ஹரிணி அமரசூரியவே. அனுர குமார திஸாநாயக்கவுக்கு பயங்கரமான, அழுக்குப் படிந்த ஒரு கடந்த காலம் உண்டு. ஹரிணி அமரசூரியவுக்கு அவ்வாறான கடந்தகாலம் இல்லை. ஹரிணி அமரசூரிய படித்த, புத்திசாலியான சர்வதேச ரீதியிலான தொடர்புகளுடைய பெண்.

பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக்கப்படும் என்ற முன்மொழிவு தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளுக்குள் உள்வாங்கப்படும் என ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கூறியிருந்தால் மக்கள் எம்மை ஏசியிருப்பார்கள். எனினும், திசைகாட்டியின் கூட்டங்களில் அமர்ந்திருக்கக்கூடிய பெண்கள் அவ்வாறான கதைகளைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

மகளைப் பெற்ற தாயொருவரால் அவ்வாறான கதைகளைக் கேட்டு கைதட்ட முடியுமா? சரியானதொரு வேலைத்திட்டத்தைக் கொண்ட தூர நோக்குடைய இடத்தை பெண்கள் தெரிந்தெடுக்க வேண்டும். ” என ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.