போர் பதற்ற நிலையிலும் இலங்கை தேயிலைகளுக்கான கேள்வி உயர்வு!

0
23

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும் இலங்கை தேயிலைகளுக்கான கேள்வி கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்ற நிலைமைகள் காரணமாக அந்த நாட்டு மக்கள் உணவுப் பொருட்களைக் கையிருப்பில் வைக்க முற்பட்டுள்ளதால் தேயிலைக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் ராஜ் ஒபேசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த வார ஏலத்தில் ஒரு கிலோ தேயிலையின் சராசரி விற்பனை விலை ரூ. 1,153 ஆகக் காணப்பட்டது. ஏலத்தில் விற்பனையாகாத தேயிலையின் அளவு 8% முதல் 10% வரை மாத்திரமே உள்ளது.

இது சந்தையின் சாதாரண நிலையாகும். ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டமை மற்றும் மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக குவைத், சவூதி அரேபியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கான ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

துருக்கி மற்றும் ஈராக் போன்ற நாடுகளுக்கு மாற்று கப்பல் பாதைகள் ஊடாக ஏற்றுமதிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இதன் விளைவாக சந்தையில் நிலவிய பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன.

தேயிலை செய்கையில் ஈடுப்படும் விவசாயிகளுக்கு மூன்று மாதங்களுக்குத் தேவையான உரத்தை வழங்குவதற்கான விசேட திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேயிலை தொழிற்சாலைகளின் உற்பத்தியைத் தடையின்றி முன்னெடுப்பதற்குத் தேவையான எரிபொருளைத் தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்ய விசேட சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.