இங்கு வராதீர்கள்; இஸ்ரேல் பிரஜைகளுக்கு தடை விதித்த மாலைதீவு!

0
81

காசா யுத்தம் காரணமாக இஸ்ரேலிய பிரஜைகள் மாலைதீவிற்குள் நுழைவதை தடை செய்துள்ளதாக மாலைதீவு அரசாங்கம் அறிவித்துள்ளது.

காசா யுத்தம் குறித்து மாலைதீவில் மக்களின் சீற்றம் அதிகரித்துவரும் நிலையிலேயே மாலைதீவு ஜனாதிபதி அலுவலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளை தடை செய்வதற்கு ஜனாதிபதி முகமட் முய்சு தீர்மானித்துள்ளதாக அவரது அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை காசா யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் இஸ்ரேலியர்களிற்கு தடை விதிக்க வேண்டும் என எதிர்கட்சியினரும் அரசாங்கத்தின் கூட்டணியில் இடம்பெற்றுள்ளவர்களும் அழுத்தங்களை பிரயோகித்து வந்த நிலையில்  இஸ்ரேலியர்கள் மாலைதீவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.  

மாலைதீவின் தடை அறிவிப்பை தொடர்ந்து இஸ்ரேலிய பிரஜைகளை மாலைதீவிற்கு செல்ல வேண்டாம் என இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன் தற்போது மாலத்தீவில் தங்கியுள்ள இஸ்ரேல் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுவது குறித்துப் பரிசீலிக்குமாறு இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.