நெருக்கடிகளில் உள்ள வணிகங்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட வசதி

0
93

கடந்த சில வருடங்களாக ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக தமது தொழில்களில் சிரமப்படும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் ஏழு சதவீத சலுகை வட்டியுடன் கடன்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சாந்த வீரசிங்க ( Shantha Weerasinghe) தெரிவித்துள்ளார்.

வீழ்ச்சியடைந்த அல்லது சிரமப்படும் எந்தவொரு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களும் தங்கள் வணிகத்தை மீட்டெடுப்பதற்காக இந்தக்கடனைப் பெற ஊக்குவிக்கப்படுவதாக வீரசிங்க கூறியுள்ளார்.

ஆறு மாத காலம்

முன்னதாக கடனை செலுத்தாததால் கறுப்பு பட்டியலில் உள்ள தொழிலதிபர்களும் இந்த கடன் திட்டத்தை அணுகலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் 5 மில்லியன் ரூபாய் வரையிலான கடனைப் பெற்று ஐந்து வருடங்களில் ஆறு மாத கால அவகாசத்துடன் மீளச் செலுத்தலாம் எனவும் சாந்த வீரசிங்க கூறியுள்ளார்.

மேலும், இலங்கையின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட அண்மைய ஆய்வில், இலங்கை எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள் காரணமாக சுமார் 20 சதவீத வணிகங்கள் 2023ஆம் ஆண்டளவில் மூடப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.