‘தனிஒருவன் 2’ திரைப்படம் வெளிவருமா? கொந்தளிக்கும் நடிகர் ஜெயம் ரவியின் இரசிகர்கள்!

0
58

நடிகர் ஜெயம் ரவி, தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ‘ஜெயம்’ திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.’ஜெயம்’ திரைப்படத்தில் நடித்ததால் இவர் ஜெயம் ரவி என்று இரசிகர்களால் அன்பாக அழைக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களில்,தனக்கேற்றவாறு, பொருத்தமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துத் தனக்கென ஒரு இரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தார்.

நடிகர் ஜெயம் ரவி,மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ‘தனி ஒருவன்’ திரைப்படத்தில் அனைவரும் பாராட்டத் தக்கவகையில் நடித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து தனி ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

இதன்போது இயக்குநர் மோகன் ராஜா “வெகு விரைவில் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்றும் அத்துடன் ‘தனி ஒருவன்’ திரைப்படத்தின் முதல் பாகத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இணைந்து நடித்திருந்த நடிகை நயன்தாராதான் பாகம் இரண்டிலும் நடிப்பார்” என்றும் அதிகாரபூர்வமாகத் தெரிவித்திருந்தார்.

அத்துடன் வில்லனாக நடிகர் அரவிந்த்சாமிக்குப் பதிலாக யார் நடிக்கப்போகின்றார் என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது, இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடிகர் பகத் பாசில் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்பட்டது.

ஆனால்,குறித்த இந்த அறிவிப்பின் பின்னதாக,இத்திரைப்படம் தொடர்பான அறிவிப்புக்களோ அல்லது படப்பிடிப்பு வேலைகள் தொடர்பான அறிவிப்புக்களோ உத்தியோகபூர்வமாக வெளியாகவில்லை.

இந்த நிலையில், தற்போது இரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில்,இத்திரைப்படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

‘தனி ஒருவன் 2’ திரைப்படத்திற்கு இந்திய மதிப்பில் ரூ. 120 கோடி செலவாகும் என்று இயக்குநர் மோகன் ராஜா தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்த நிலையில், 120 கோடி தரமுடியாது என்றும்,இதில் 50 கோடியை குறைக்க வேண்டும் எனத் தயாரிப்பு நிறுவனம் மோகன் ராஜாவிடம் கூறியுள்ளார்களாம்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் ‘தனிஒருவன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பினை ஆரம்பிக்கவிருந்த நிலையில், இத்திரைப்படத்தைத் தள்ளிப்போட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.