யாழில் மீட்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம்; மகனே தனது தாயைக் கொன்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்

0
44

யாழ். தெல்லிப்பழையில் உயிரிழந்த தாயாரை மகன் கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தெல்லிப்பழையில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்றுமுன்தினம் (2024.05.04) குடும்பப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது. அதே பிரதேசத்தைச் சேர்ந்த கனடி ஜஸ்மின் என்ற 37 வயது பெண்ணே சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்யப்பட்டாரா? எனக் கண்டறியும் நோக்குடன் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் இந்த மரணம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் 16 வயதுடைய மகன் காணாமல் போயுள்ளார். அவரைப் பொலிஸார் தொடர்ந்தும் தேடி வருகின்றனர். சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மகன், ‘மொபைல் கேம்ஸ்’ எனப்படும் கைபேசி விளையாட்டுக்களுக்கு அடிமையானவர் எனத் தெரியவந்துள்ளது.

அத்துடன், 16 வயதுடைய மேற்படி சிறுவன் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கலாம். ஏனெனில் அவரது அறையில் சில சந்தேகத்திற்கிடமான வாசகங்கள் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.