வாகன இறக்குமதி அனுமதியை நீட்டிக்க எதிர்ப்பு!

0
53

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கைக்கு அமைய வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு முழுமையான இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், 20 ஆயிரம் அமெரிக்க டொலருக்கு அதிகமான தொகையை இந்நாட்டுக்கு அனுப்பிவைக்கும் இலங்கையர்களுக்கு 12 மில்லியன் ரூபா வரையில் சொகுசு மோட்டார்வாகனங்களுக்கு வரிச் சலுகை வழங்கப்படுகின்றது. 

2023 பெப்ரவரி 10ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய முதல் தடவையாக நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம் 2023 மே 31ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக காலம் நீடிக்கப்பட்டது. 

இது மீண்டும் 2024.01.24ஆம் திகதி வர்த்தமானி அறிவித்திலின் ஊடாக மேலும் நீடிக்கப்பட்டது.

இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்த நபர்கள் உள்ளிட்ட சகல தகவல்களையும் வழங்குமாறு நிதி அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தபோதும், இரகசிய மற்றும் தனிப்பட்ட நபர்களின் தகவல்களை வழங்குவதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவேண்டி இருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவித்திருப்பதாகவும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். 

இருந்தபோதும், இத்திட்டத்தில் வெளிப்படைத் தன்மையோ அல்லது உரிய ஒழுங்குமுறைப்படுத்தலோ காணப்படவில்லையென குழு தெரிவித்தது.

இந்த நிலைமையின் ஊடாக பல்வேறு மோசடிகள் இடம்பெறுவதாகக் குற்றச்சாட்டுக்கள் பல குழுவிடம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இந்த வரிச்சலுகையின் ஊடாக 100 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்கள் தொடக்கம் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. 

இதுவரையில் 1019 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இவற்றின் ஊடாக 109.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இங்கு புலப்பட்டது. அத்துடன், இதுவரை பெறப்பட்ட அனுமதிப்பத்திரங்களின் பெறுமதி 46 மில்லியன் அமெரிக்க டொலர் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அனுப்பப்பட்ட பணம் ஒரேயடியாக கணக்கில் வைப்பிலிடப்பட்டபோதும், வெளிநாட்டில் உள்ள பணியாளர்கள் இந்த வசதியைப் பெறுவதற்குத் தகுதி பெறுவதால், இந்த முறையின் ஊடாக பல்வேறு வணிகர்கள் பணச் சலவை செய்வதற்காக இது வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். 

அத்துடன், பொதுவான பணிகளை மேற்கொள்ளும் நபர்கள் இந்தளவு பெறுமதியான வாகனத்தை இறக்குமதி செய்கின்றார்களா என்ற சந்தேகம் எழுவதாகவும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், வாகன இறக்குமதிக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள பின்னணியில் வாகனத்தை இறக்குமதி செய்வதற்குக் காணப்படும் ஒரேயொரு வாய்ப்பு இது என்பதால் மோசடிகள் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், இந்தத் திட்டத்தில் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் நபர்கள் என்ற பெயரில் (Facilitator) ஒரு தரப்பினர் இருப்பதாகவும், அவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லையென்றும் தலைவர் குறிப்பிட்டார். அதன்படி, அவர்கள் பற்றிய தகவல்களை உடனடியாக வழங்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டதுடன், எதிர்காலத்தில் அனைத்துத் தகவல்களையும் பரிசீலித்து இந்த வர்த்தமானிக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டுமென அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

அத்துடன், அந்நியச்செலாவணி சட்டத்தின் கீழ் 2371/48 , 2371/49 மற்றும் 2371/50 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் மூன்றுக்கும், 2003ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க நிதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2369/27, 2374/19 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்களில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டது.