பிலிப்பைன்ஸில் கடும் வெப்பம் ; பாடசாலைகளுக்கு விடுமுறை ; கற்றலுக்கு இணையவழி கல்வி முறை

0
56

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருவதால் 2 நாட்கள் அனைத்து அரசாங்க  பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றலுக்கான மாற்று ஏற்பாடாக இணையவழி கல்வியை மேற்கொள்ள அந்நாட்டு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இந்நிலையில், பிலிப்பைன்ஸின் தலைநகர் பகுதியில் அடுத்த மூன்று நாட்களில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை (98.6 டிகிரி பாரன்ஹீட்) எட்டக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு 45 டிகிரி செல்சியஸ் என்ற அபாயகரமான மட்டத்திற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன்காரணமாக வெப்ப பக்கவாதம் கூட ஏற்படலாம்.

இதேவேளை, மே மாதம் இரண்டாவது வாரம் வெப்பக் குறியீடு  ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் வெப்பத்தினால் ஏற்பட்ட வரட்சியினால் ஏப்ரல் மாதம் ஆரம்பத்தில் 13 மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் பொருளாதார உற்பத்தியில் முக்கால்வாசி பங்கு வகிக்கும் லூசோனி தீவிற்கு மின்சாரத்தை விநியோகத்தில் வெப்ப அலை சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் மணிலாவிலுள்ள விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை  ஆறு குளிரூட்டும் கோபுரங்களில் இரண்டு நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளானார்கள்.

பயணிகளுக்காக மின்விசிறிகள் பயன்படுத்தப்படுவதாக விமான நிலைய ஆணையம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.