கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்களின் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்று செயற்படுவதாக கொழும்பு மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது .
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை (18) இடிக்கப்பட்டுள்ள 21 கடைகளும் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் என கொழும்பு மாநகர சபையின் நகர அழகுபடுத்தல் திட்ட இணைப்பாளர் பொறியியலாளர் குமுது போகஹவத்த தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்களை ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்று குறித்த கட்டிடங்களை வாடகைக்கு விடுவதாகவும் வேறு நபர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் இந்த விடயம் தொடர்பில் நகர சபையால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்களுக்காக பணத்தை வீணடிக்க வேண்டாம் என கொழும்பு மாநகர சபையும் நகர அபிவிருத்தி அதிகார சபையும் மக்களை கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .