மலையகத் தமிழர்களின் நோக்கில் JVP: இந்தியாவுக்கு அனுப்ப வேண்டுமென்ற கருத்தைப் பரப்பியவர்கள்

0
38

இலங்கைத்தீவை தொடர்ச்சியாக ஆட்சி செய்த தேசிய கட்சிகள் என கூறப்பட்டு வரும் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனைத்துமே இனவாதத்தை வைத்து தான் ஆட்சி செய்தன.

எனினும், இவற்றைத் தவிர மார்க்சிய – லெனினிய – மாவோவிய – சேகுவேராக் கொள்கைகளை துல்லியமாகக் கடைப்பிடிக்கிறோம் என கூறிக்கொண்டு வந்த ஜேவிபி என்றழைக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி, இன்று தேசிய மக்கள் சக்தி எனப் பூசி மெழுகிக் கொண்டு நாட்டை சுற்றி வலம் வருகின்றது.

இந்திய வம்சாவழித் தமிழர்கள் என்று அழைக்கப்படும் மலையகத் தமிழ் மக்களை இந்தியாவின் கைக்கூலிகள் என்று கூறி அவர்களை முற்றிலும் இந்தியாவுக்கே துரத்தி அடித்துவிட வேண்டும் என்ற கொள்கையைப் பரப்பியது ஜேவிபிதான்.

1971ஆம் ஆண்டு ஜேவிபி இந்நாட்டு அப்பாவி இளைஞர்களை ஒன்றுதிரட்டி ஏப்ரல் இளைஞர் கிளர்ச்சி என்ற ஒன்றை ஏற்படுத்தி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்ற எத்தனித்த போதும் அது படுதோல்வியில் முடிந்தது. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் பலி கொடுக்கவும் வேண்டியேற்பட்டது இன்னும் மறையாத வடுக்களே.

இலங்கைத்தீவின் மலையகத்திலும் மற்றும் தலைநகர் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் வாழும் மலையகத் தமிழர்கள் தொடர்பாக ஜேவிபி இன்றுவரை சரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகக் கூற முடியாது.

மலையகத் தமிழ் மக்கள் தொடர்பாக அன்றைய இளைஞர் மத்தியில் விதைத்த இனவாதம் கொண்ட கருத்துக்கள் இன்றும்கூட இந்த மக்களுக்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் வேரூன்றியுள்ளதை அவதானிக்க முடியும்.

மலையகத் தமிழர்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் தோட்டங்களிலும் பெருந்தோட்டங்களிலும் பணிபுரியும் மலையகத் தமிழ் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு ஜேவிபியிடம் உரிய பதில் இல்லை.

ரோகண விஜயவீர

இலங்கையின் மூன்றாவது தேசியக் கட்சியாக மாறி வரும் மக்கள் விடுதலை முன்னணி 1965ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி இலங்கை கம்யூனிட்ஸ் கட்சியின் தலைவரான ரோகண விஜயவீர இதன் ஸ்தாபகர் ஆவார். நாளடைவில் தடை செய்யப்பட்ட கட்சியாக மாறிய போதிலும் 1994ஆம் ஆண்டு முதல் மீள செயற்பட ஆரம்பித்தது.

தற்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஜே.வி.பியின் அரசியல் கூட்டணி எனப்படும் தேசிய மக்கள் சக்தி என பெயர் மாற்றம் செய்து கொண்டு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சற்று உற்று நோக்கினால் தேசிய மக்கள் சக்தியின் பின்னணியில் எதுவிதமான ஒரு அரசியல் கூட்டணியும் இல்லை என்பது தெளிவு.

ஆரம்பத்தில் ஜேவிபி எனும் பெயரில் இனவாதத்தை தூண்டிய இந்தக் கட்சி தற்போது வடக்கு கிழக்கு தமிழர்கள் பக்கம் திரும்பியுள்ளது.

தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு வழங்கலாம் என்பதை கூற மறுப்பது ஏன்? இவ்வாறான காரணிகளால் ஜேவிபி ஒரு பேரினவாதக் கட்சி என்ற பார்வையே தமிழ் மக்கள் மத்தியில் உண்டு.

வடகிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பது போன்ற தோற்றப்பாட்டை தற்போது காண்பிக்க முற்பட்டு வரும் ஜேவிபி, தேசிய மக்கள் சக்தி என்று புதிய பெயருடன் இயங்க முற்பட்டு வருகின்றது.

இடதுசாரிகளா?

2005 இல் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக்கி பின்னர் அவரைப் போருக்குத் தள்ளியதும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த ஜேவிபிதான். 2009 முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு ஜேவிபியும் பொறுப்புக்கூற வேண்டும்.

ஆரம்பத்தில் இவர்கள் தங்களை இடதுசாரிகள் என்று அழைத்துக் கொண்டாலும் அவர்களது ஒட்டுமொத்தமான கொள்கை, சிங்கள -பௌத்த அதிதீவிர தேசியவாதமாகவே இருந்தது.

அவர்கள் இலங்கையில் வசித்து வரும் இந்திய வம்சாவழித் தொழிலாளர்களைக் காரணமாக வைத்து இந்தியா தனது ஆக்கிரமிப்பை இலங்கையில் விஸ்தரிக்கின்றது என்று பெரும் குற்றச்சாட்டை இந்தியா மீது சுமத்தியதோடு இலங்கையில் வசிக்கின்ற சகல இந்திய வம்சாவழி மக்களையும் இந்தியாவுக்கே துரத்திவிட வேண்டுமென்பதை தமது கொள்கைகளில் ஒன்றாகக் கொண்டிருந்தனர்.