அமைச்சர் டக்ளஸின் அலுவலகத்தில் வைத்து ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்: நடவடிக்கை எடுக்காத பொலிஸார்

0
32

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் குழப்ப நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஊடகவியலாளர் ஒருவருக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு இடம்பெற்ற போதே குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.

அமைச்சரின் அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்த போது முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் செய்தி சேகரிப்பதற்கு சென்றுள்ளார்.

மக்கள் சந்திப்பு தொடர்பில் செய்தி சேகரிக்கும் நோக்கில் காணொளி பதிவு செய்த நிலையில் அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் காணொளி எடுக்க வேண்டாமெனத் தடுத்ததோடு அதனை மீறி காணொளி எடுத்து செய்தி பிரசுரித்தால் வீடுதேடி வருவோம் எனவும் அச்சுறுத்தல் விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிரட்டல் விடுக்கப்பட்டமை தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பொலிஸார் அமைச்சருக்கு இது குறித்து தெரியப்படுத்தி இருந்ததாகவும் குறிப்பிட்ட நிலையில் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.