வாக்கு பிச்சைக் கேட்டு யாழிற்கு படையெடுக்கும் சிங்கள அரசியல் வாதிகள்: பொது வேட்பாளருக்கே வாக்களியுங்கள் – சரவணபவன்

0
61

ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நிலையில் வாக்கு பிச்சைக்காக தென்னிலங்கை அரசியல்வாதிகள் வடக்கு மாகாணத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணபவன் தெரிவித்தார்.

இந்நிலையில் எமது இருப்பினை பலப்படுத்த வடக்கு கிழக்கு வாழ் பொது மக்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் பின்னர் இந்த ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளர் தொடர்பாக சிந்திக்கப்பட்டது. இருந்தும் அது தொடர்பாக பெரிதாக கடந்த தேர்தல்களில் பேசப்படாவில்லை.

இம்முறை பொது வேட்பாளர் குறித்து கவனம் செலுத்தப்படுகின்றது. பொது வேட்பாளர் இல்லாத பட்சத்தில் பல மக்கள் இம்முறை வாக்களிக்காமல் இருப்பதற்கான சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

பெரும்பான்மை இனத்தில் சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க அனுரகுமார திசாநாயக்க மற்றும் ராஜபக்ச தரப்பினர்களுக்கு தேர்தலில் போட்டியிட தயாராகி வருகின்றனர்.

எனவே இவ்வாறாக வாக்குகள் பெரும்பான்மை இனத்தில் பிரிந்து போகின்ற பட்சத்தில் நிச்சயமாக முடிவெடுக்க வேண்டிய வாக்காளர்களாக தமிழ் மக்கள் இருக்கப் போகின்றார்கள்.

எனவே தமிழர்களை எவ்வாறு அரவணைத்து செல்லலாம் தமிழர்கள் மீது எவ்வாறு பூச்சூடி ஆசனத்தை பெறலாம் என அவர்கள் இனி சிந்திக்க தொடங்குவார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.