கனடா மோகம்; பணயக் கைதிகளாக சிக்கிய இலங்கையர்கள்: பின்னணியில் பாகிஸ்தானியர்கள்

0
47

இலங்கை பிரஜைகள் நால்வரை ஐரோப்பிய நாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாக தெரிவித்து பணயக் கைதிகளாக தடுத்து வைத்திருந்த பாகிஸ்தான் பிரஜைகள் நான்கு பேர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேபாள காவல்துறையினருக்கு அந்த நாட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நான்கு பாகிஸ்தானியர்களும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி 42 வயதுக்கும் 62 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு பாகிஸ்தானிய பிரஜைகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் தொழில்

இதேவேளை கனடா, ருமேனியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாக போலியான வாக்குறுதிகளை வழங்கி இலங்கைப் பிரஜைகள் நால்வரிடம் இருந்து மில்லியன் கணக்கான பணத்தை சந்தேகநபர்கள் வசூலித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இலங்கையிலிருந்த அழைத்துச் செல்லப்பட்ட குறித்த இலங்கையர்கள், பாகிஸ்தானியர்களால் தாக்கப்பட்டு துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நேபாள காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் காத்மண்டுவில் உள்ள பல்வேறு விடுதிகளில் சந்தேகநபர்கள் குறித்த இலங்கையர்களை பணயக் கைதிகளாக தடுத்து வைத்திருந்ததுடன் அவர்களது கடவுச்சீட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த இலங்கையர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நேபாள காவல்துறையினர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.