ஷொப்பிங் பைகளுக்கு கட்டணம் வசூலிக்க தடை

0
53

கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் ஷொப்பிங் பைகளுக்கு பணம் அறவிடுவதை தடை செய்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதாக சட்டமா அதிபர் இன்று (28) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி சுற்றாடல் நீதி மய்யத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரசாங்கத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திருமதி அவந்தி பெரேராவினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பொருட்களை வாங்கும் போது நுகர்வோருக்கு கடைகளில் வழங்கப்படும் ஷொப்பிங் பைகளுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம் என சுற்றாடல் நீதி மையம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.

அந்த பைகளுக்கு கட்டணம் வசூலித்தால், அவற்றின் பயன்பாடு தடைபடும் என்றும், அதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் என்றும் மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.