ஸ்வர்ணவாஹினி அலைவரிசைக்கு இன்று பிறந்த நாள்: சர்வமத ஆசீகளுடன் நிகழ்வுகள்

0
65

இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தை ஸ்வர்ணவாஹினி அலைவரிசை (Swarnavahini Tv) பதித்துள்ளது. வெற்றிகரமாக ஸ்வர்ணவாஹினி அலைவரிசை இன்று சனிக்கிழமை தனது 27ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

ஸ்வர்ணவாஹினியின் 27 ஆண்டு பயணத்தை கொண்டாடும் வகையில் தலைமை அலுவலக வளாகத்தில் இடம்பெற்ற சர்வமத நிகழ்வில் லைக்கா நிறுவனத்தின் உயரதிகாரிகள், தொலைக்காட்சியின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.

வெற்றிப் பயணம்

கடந்த 1997ஆம் ஆண்டு மார்ச் மாதம் இன்று (16 ஆம் திகதி) போல் ஒரு நாளில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்வர்ணவாஹினி அலைவரிசை மக்களின் மனங்கவரும் படைப்புக்களை தயாரித்து வழங்கிவருகின்றது.

மக்களின் வாழ்வியல் விடயங்கள், தேசபிமான அம்சங்கள் என மக்களின் அன்றாட வாழ்வை வளப்படுத்தும் விடயங்களை ஒளிபரப்பிவருகின்றது.

லைக்கா குழுமத்தின் (Lyca group) கீழ் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்வர்ணவாஹினி அலைவரிசையின் வளர்ச்சிக்கு அதன் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் ஆற்றிவரும் பங்களிப்பு அளப்பெரியது.

ஸ்வர்ணவாஹினி அலைவரிசையில் ஒளிபரப்பப்படும் ஜனரஞ்சகமான நிகழ்ச்சிகள் இன்றும் மக்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்துள்ளது என்றால் அது மிகையல்ல.

ஊடகக் கலையின் முன்னோடியாக இருந்து பார்வையாளர்களின் ரசனையின் பல்வேறு பரிமாணங்களை ஆராய்ந்து,அவர்களின் இதயங்களை வருடிய நிகழ்ச்சிகள் பல தேசிய விருதுகளைப் பெற்று சாதித்துள்ளன.

நாட்டின் தொலைக்காட்சி கலைகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை உருவாக்கி வடிவமைப்பில் முன்னணியில் இருந்த ஸ்வர்ணவாஹினி மிகக் குறுகிய காலத்தில் பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபரமடைந்து நிலைத்து நிற்கின்றது.

செய்தித்துறையில் புரட்சி

இலங்கையில் தொலைக்காட்சி செய்தித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்திய Live@8 செய்தி முத்திரை, நாளிதழ்களின் பக்கங்களைப் புரட்டிய ஸ்வர்ணவாஹினி “முல் பிடுவ“ , தற்போதைய நிலவரங்களை விவாதித்த அரசியல் உரையாடல் நிகழ்ச்சியான “இர ஹரி கெலின்“ காணப்படுகின்றது.

இதேவேளை “ரது இர“ அரசியல் நிகழ்ச்சி தொலைக்காட்சி துறையில் திருப்புமுனையாக அமைந்தது. இதுமட்டுமின்றி பல்வேறு தலைப்புகளில் கொண்டு வரப்பட்ட விவாத நிகழ்ச்சிகள், இளைஞர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் என்பன பார்வையாளர்களின் ரசனையினை வெகுவாக வென்றுள்ளன.

அந்த வகையில் ஸ்வர்ணவாஹினி அலைவரிசை இலங்கையின் பெருமையுடன் பல நிகழ்ச்சிகள் மூலம் பார்வையாளர்களின் மனதைத் தொட்டு, தொலைக்காட்சிக் கலையில் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

கடந்த 27 வருடங்களாக தன்னுடைய வெற்றிப்பயணத்தை தடம் பதித்து வலம்வரும் ஸ்வர்ணவாஹினிக்கு ஒருவன் செய்தித்தளத்தின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.