ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கை

0
85

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் நடைபெற்ற அரசகட்டமைப்பின் அத்துமீறல்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை நாடாளுமன்றை புறக்கணிக்கும் தீர்மானத்தை எடுத்து உதவுமாறு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கோரியுள்ளது.

இது தொடர்பில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் அகத்தியர் அடிகளார், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில், மகா சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் நடைபெற்ற அரசகட்டமைப்பின் அத்துமீறல்கள் மற்றும் காவல்துறையினரின் அட்டுழியங்கள் என்பவற்றின் தொடர் விளைவாக ஆலய பூசகர், தர்மகர்த்தாக்கள் உட்பட எட்டு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள்.

இந்த நிலையில் இலங்கையில் வட கிழக்கில் தொடர்ச்சியாக சைவ ஆலயங்கள் குறிப்பாக புராதன ஆதி சிவன் ஆலயங்களில் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டு தமிழர்கள் மீது போலி வழக்குகள் பதிவு செய்வதும் அதே நேரம் அவை அரச இயந்திரத்தின் உதவியுடன் குறிப்பாக பொலிஸ், தொல்லியல், வனவள திணைக்களங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு உள்ளூர் தமிழ் மக்கள் சொல்லொணாத்துயரை அனுபவிப்பதும் தொடர்கதையாக உள்ளது.

போராட்டத்திற்கு வலு சேர்க்க கோரிக்கை
எத்தனையோ கண்டன அறிக்கைகள் வெளியிட்டும், கவனயீர்ப்புக்கள் நடைபெற்ற போதும் அவை எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று எவ்விதப் பலனும் இல்லாமல் ஆகிவிட்டது.

இந்நிலையில் அரசிற்கு பாரிய அழுத்தத்தை பிரயோகிக்கவும், சிங்களப் பொதுசனங்களினதும் சர்வதேச கவனத்தையும் ஈர்த்து இந்த பிரச்சனைகளுக்கு முடிவு கொண்டு வர வேண்டிய நிலையிலும் ஜனநாயக ஒத்துழையாமை போராட்ட வடிவங்களில் ஒன்றாகிய நாடாளுமன்றை உரிய தீர்வு கிடைக்கும் வரை புறக்கணிக்கும் தீர்மானத்தை எடுத்து உதவுமாறு தமிழ்ப் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ் பொது அமைப்புக்கள், மத நிறுவனங்கள், சிவில் சமூகம் சார்பாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பினராகிய நாம் கோரி நிற்கின்றோம்.

அந்தவகையில் தாங்களும் ஒரு தமிழ்ப் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இத்தீர்மானத்தினை எடுத்து இப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு கோரி நிற்கின்றோம் – என்றுள்ளது.