இலங்கையில் நம்பிக்கை வைக்க முடியாத ஒரே நபர் மைத்திரிபால: கூட்டணிக்கு அழைத்தாலும் செல்ல மாட்டோம் – வீரவன்ச

0
123

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் எவ்வித அரசியல் கூட்டணியையும் ஏற்படுத்த போவதில்லை என உத்தர லங்க சபாகயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சதெரிவித்துள்ளார்.

பாதுக்க பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கேள்வி: மைத்திரிபால சிறிசேன நாற்காலி சின்னத்தில் கூட்டணி ஒன்றை ஆரம்பித்துள்ளார். கூட்டணியில் இணையுமாறு உங்களை அழைத்தார்களா?.

பதில்: இல்லை. அப்படி அழைத்தாலும் மைத்திரிபால சிறிசேனவுடன் ஈடுபடக்கூடிய அரசியல் எதுவுமில்லை.

கேள்வி: அவர் அழைப்பு விடுத்தால்?

பதில்: ஐயோ… அழைப்பும் விடுக்க மாட்டார்.அழைத்தாலும் நாங்கள் அதனை ஏற்க மாட்டோம்.

கேள்வி: ஒரு முறை நீங்கள் அவருடன் இணைந்து கூட்டணி ஒன்றை உருவாக்கினீர்களே?.

பதில்: ஆமாம் உருவாக்கினோம். கூட்டணி உருவாக்கப்பட்டு மறுநாளே சிறிசேன அந்த கூட்டணியை உடைத்தார். ஒரு முறை அப்படி செய்த அந்த மனிதரை நம்ப முடியுமா?. இலங்கையில் நம்பிக்கை வைக்க முடியாத ஒரே நபர் மைத்திரிபால சிறிசேன எனவும் வீரவன்ச கூறியுள்ளார்.