தமிழக அரசே சாந்தனின் மரணத்திற்கு காரணம்! மத்திய – மாநில அரசை சாடிய சீமான்

0
143

சாந்தனின் கடைசி விருப்பம் இறுதியாக ஒரு தடவை தனது தாயை பார்த்து அவர் கையால் ஒருவாய் சோறு சாப்பிட வேண்டும் என்பதே என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

எனினும் அதை கூட நிறைவேற்றி வைக்க முடியவில்லை என அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். உடல்நலக் குறைவால் காலமான சாந்தனின் உடலுக்கு சீமான் அஞ்சலி செலுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், நான்கு மாத கால அவருடைய தவிப்பு தனது தாயை பார்த்து விட வேண்டும் என்பதே. நியாயமாக இதை பார்க்கும் போது இது ஒரு கொலை. சட்டக்கொலை. உடலில் இருந்து உயிர் பிரியும் விடுதலையை நாம் கேட்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். 

முதலாம் இணைப்பு

சாந்தனின் மரணத்திற்கு தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசே காரணம் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். சாந்தனின் மரணத்திற்கு அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரது இரங்கில் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“அன்புத்தம்பி சாந்தனுக்கு முழுமைபெறாத நீதி விசாரணை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 32 ஆண்டுகள் கடும் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

சித்திரவதை முகாம்

அத்துடன், வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் மரணம் குறித்தான சிந்தனையுடன் வாழவேண்டிய கொடுந்தண்டனையும் வழங்கி தண்டித்தது இந்த நாடு.

பல கட்ட சட்டப்போராட்டங்களுக்கு பிறகு மரண தண்டனையிலிருந்தும், சிறைக்கொடுமையிலிருந்தும், தண்டனை விதித்த நீதிமன்றமே விடுதலை செய்த பிறகும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு சிறிதும் கருணையற்று சிறப்பு முகாம் எனும் சித்திரவதை முகாமில் அடைத்து சிறுக சிறுக சிதைத்து இன்றைக்கு தம்பி சாந்தனை மரணம் வரை தள்ளியிருக்கிறது” என்றுள்ளது.