தமிழக அரசு விளம்பரத்தில் சீன கொடி; அமைச்சரை வசமாக வளைத்த அண்ணாமலை… கவனித்தீர்களா?

0
92

குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளம் குறித்த அறிவிப்பு தொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள விளம்பரத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்த விளம்பரத்தில் சீனாவின் கொடி இருப்பதாக அண்ணாமலை விமர்சனம் வைத்துள்ளார். அதில் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் இன்று முன்னணி தமிழ் நாளிதழ்களுக்கு அளித்த இந்த விளம்பரம் அதிர்ச்சி அளிக்கிறது. சீனா மீதான திமுகவின் அர்ப்பணிப்பையும் நமது நாட்டின் இறையாண்மையை அவர்கள் முற்றிலும் புறக்கணிப்பதையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த விளம்பரத்தை வெளியிட்டு உள்ளனர்.

ஊழலில் கொடிகட்டிப் பறக்கும் கட்சியான திமுக, குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே தங்களின் ஸ்டிக்கர்களை ஒட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது.

திமுகவினர் இப்படி விரக்தியின் உச்சத்தில் இருப்பது அவர்களின் கடந்த கால தவறுகளை எப்படியாவது மறைக்க வேண்டும் என்று முயற்சிப்பதையே காட்டுகிறது. சதீஷ் தவான் விண்வெளி மையம் இன்று ஆந்திராவில் உள்ளது. இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டு இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஏன் இதுவரை கட்டப்படவில்லை என்பதற்கு ஒரே காரணம் திமுகதான்.

இஸ்ரோவின் 1வது ஏவுதளம் கருத்தாக்கம் செய்யப்பட்டபோது,​ இஸ்ரோவின் முதல் தேர்வாக தமிழ்நாடுதான் இருந்தது. கடுமையான தோள்பட்டை வலி காரணமாக கூட்டத்தில் பங்கேற்க முடியாத அப்போதைய தமிழக முதல்வர் அண்ணாதுரை தனது அமைச்சர்களில் ஒருவரான மதியழகனை கூட்டத்திற்கு வரவழைத்தார்.

அவரை சந்திக்க இஸ்ரோ அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இறுதியாக மதியழகன் “குடித்த நிலையில்” கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டார். கூட்டம் முழுவதும் அவர் எந்த முடிவிற்கும் ஒத்துப்போகவில்லை. இதனால் தமிழ்நாட்டிற்கு அந்த திட்டம் வரவில்லை. மேலும் 60 ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டின் விண்வெளித் திட்டம் தமிழ்நாட்டிற்கு வராமல் திமுக இப்படித்தான் தடுத்தது. திமுக பெரிதாக மாறவில்லை இன்னும் மோசமாகிவிட்டது!

இன்றைய தினம் சுமார் 7,055.95 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் வெளித் துறைமுகக் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்ததோடு குலசேகரப்பட்டினம் இஸ்ரோ விண்வெளி ஏவுதளத்தின் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் சார்பிலும், பாஜக சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் பசுமை ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் உள்நாட்டுக் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு அதற்கான எரிபொருள் மையம், தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் அமையவிருக்கிறது. விரைவில் தூத்துக்குடியில் தயாரிக்கப்படும் ஹைட்ரஜன் எரிபொருள் பயன்படுத்தப்படும் உள்நாட்டுக் கப்பல்கள், காசியில் கங்கை நதியில் விரைவில் ஓடும் என்று நமது பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். மேலும் தூத்துக்குடி 3 ஆவது வடக்கு நிலக்கரித் தளம் ரூ.265.15 கோடி மதிப்பில் இயந்திரமயமாக்கப்படுகிறது.

இதனுடன் தூத்துக்குடி துறைமுக வளாகத்தில், தினமும் 5 மில்லியன் லிட்டர் கடல் நீரைக் குடிநீராக்கும் ரூ. 124.32 கோடி மதிப்பிலான திட்டமும் நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே திட்டப் பணிகளும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கப்படுகின்றன.

இன்று அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள், திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், வெறும் கோரிக்கைகளாகவே பல ஆண்டுகளாக இருந்தன. இவற்றை நிறைவேற்ற இத்தனை ஆண்டுகளாக திமுக காங்கிரஸ் கூட்டணி முன்வரவில்லை. இன்று அறிவித்துள்ள திட்டங்கள் மூலம் தமிழக மக்களுக்கும் இளைஞர்களுக்கும் பல ஆயிரம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன என்றும் நமது பாரதப் பிரதமர் குறிப்பிட்டார்.

நீர்வழி, நெடுஞ்சாலைகள், வந்தே பாரத் உள்ளிட்ட ரெயில்வே பணிகள் என அனைத்திலும் தமிழகத்தின் போக்குவரத்துத் துறையை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு என்றும் தமிழகம் கடந்த பத்து ஆண்டுகளில் அனைத்துப் போக்குவரத்துத் துறையில் பல மடங்கு முன்னேறியிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

மத்திய அரசின் நலத்திட்டங்களையும் வளர்ச்சிப் பணிகளையும் தமிழக ஊடகங்கள் வெளியிடாது. இங்குள்ள திமுக அரசு அவற்றை வெளியிட அனுமதிக்காது. ஆனாலும் தமிழக நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து நலத்திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டுதான் இருக்கும் என்றும் நமது பிரதமர் அவர்கள் உறுதி அளித்தார்.