தமிழரசுக் கட்சி எதிர்கொள்ளும் சட்ட இழுபறி; ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் பிரபல சட்டப் புலி!

0
107

தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு தடையுத்தரவு கோரி வழக்குத்தாக்கல் செய்ய ஆலோசனை வழங்கிய அந்தச் சட்டப் புலியின் செயல் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாக மாறி வருகின்றதாம்.

‘தமிழரசுக் கட்சிக்கு எதிராகவே வழக்குப் போட்ட துரோகி’ என்று அந்தச் சட்டப்புலியை கட்சிக்காரர்கள் திட்டித் தீர்க்கின்றார்களாம். ‘நீங்கள் இப்படிச் செய்தது மிகவும் பிழையான காரியம்’ என்று அவரது ஆதரவாளர்களே சலிப்புக் கட்டுகின்றார்களாம்.

‘எனக்கும் அந்த வழக்கிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்று தனது ஆதரவாளர்களின் தலையில் கைவைத்துச் சத்தியம் செய்ய வேண்டிய நிலைக்கு அந்தச் சட்டப் புலியின் நிலை வந்துள்ளதாம்.

‘சரி டமேஜ் மனேஜ்மெட் செய்வோம்” என்று கூறிக்கொண்டு ‘கட்சி சார்பாக தானே நீதிமன்றம் செல்லப்போவதாக’ சிறிதரனுக்கு அந்தச் சட்டப் புலி செய்தி அனுப்ப ‘கட்சி மீதான வழக்கைச் சந்திக்க கட்சிக்கும் தெரியும்’ என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துவிட்டாராம் சிறிதரன்.

கட்சி மீதான வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள 7 பேர்களில் சுமந்திரன் தனக்காகத் தனியாகவும் மிகுதி 6 பேருக்கு கட்சி ஏற்பாடு செய்த வழக்கறிஞரும் வாதாடப் போகின்றார்களாம்.

கட்சி எப்படியாவது கடைசியில் தன்னுடைய தயவைத்தான் நாடவேண்டி இருக்கும். அதனை வைத்துக் கட்சியை மீண்டும் தனது கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று கணக்குப் போட்டுத்தானாம் அந்தச் சட்டப்புலி வழக்குத்தாக்கல் செய்யச்சொல்லி தனது ஆதரவாளர்களுக்கு ஆலோசனை வழங்கியிருந்தாராம்.

ஆனால் ஒரேநாளில் நாறிப்போய்விட்ட அவரது திட்டத்தினால் ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் தற்பொழுது தவிக்கின்றாராம் அந்தச் சட்டப்புலி.