யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்று இரவு (9) ஹரிஹரன் இசை நிகழ்வில் இடம்பெற்ற அசம்பாவிதங்களில் சிக்கி மூவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
அதேவேளை நிகழ்ச்சியில் இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 06 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இசை நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை இலவசமாக இசை நிகழ்வை கண்டு கழித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் தடுப்புக்களை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளனர்.
களேபரமான முற்றவெளி
அங்கு கட்டண அனுமதி பெற்று இசை நிகழ்வை கண்டு களித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் வலயத்தினுள் நுழைந்து மேடை வரையில் சென்று இடையூறு ஏற்ப்டுத்தியுள்ளனர்.
அதுமட்டுமல்லாது கமராக்கள் பொருத்தப்பட்டு இருந்த உயரமான மேடைகள், ஒலி அமைப்புக்கள் செய்யப்பட்டிருந்த மேடைகள், பனை மரங்கள் உள்ளிட்ட உயரமான இடங்களில் ஏறி அட்டகாசத்திலும் ஈடுபட்டனர்.
இதனால் இசை நிகழ்வு இடையில் சில மணி நேரங்கள் இடைநிறுத்தப்பட்டு பொலிஸார், விசேட பொலிஸ் அதிரடி படையினர் மேலதிகமாக மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
அதன்பின்னர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து இசை நிகழ்வை மீள ஆரம்பித்து சில ஒரு மணித்தியாலத்திற்குள் அவசர அவசரமாக முடித்துக்கொண்டனர்.
அதேவேளை குழப்பங்களுக்கு நிகழ்வின் ஏற்பாடுகளில் உள்ள குறைகளே காரணம் என பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.