வன்முறை, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தான் தேர்தல்: சிறையில் இருந்து வாக்களித்தார் இம்ரான் கான்

0
134

தீவிரவாத தாக்குதல்கள், பொருளாதார நெருக்கடி மற்றும் தேர்தல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் பாகிஸ்தானில் 12 ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளன.

ஆழ்ந்த அரசியல் பிளவுகள் காரணமாக கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் பற்றிய கவலைககளும் அங்கு எழுந்துள்ளன.

முன்னாள் பிரதமரும், ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவருமான இம்ரான் கான், நம்பிக்கை வாக்கெடுப்பினால் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தேர்தல் நடைபெறுகிறது.

மூன்று முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் இப்போது போட்டியில் உள்ளார், பல ஆய்வாளர்கள் பாகிஸ்தானின் இந்த தேர்தல் நம்பகத்தன்மையற்ற தேர்தல் என்று கூறியுள்ளனர்

  • வாக்குப்பதிவு ஆரம்பமான பின்னர் பாகிஸ்தான் முழுவதும் இணையம் மற்றும் மொபைல் சேவைகள் நிறுத்தம்
  • வாக்கெடுப்புகள் காலை 8 மணிக்கு (03:00 GMT) தொடங்கி மாலை 5 மணிக்கு (12:00 GMT) முடிவடையும்.
  • வாக்காளர்கள் தங்கள் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள்.
  • மத்திய சட்டமன்றத்திற்கு 5,121 வேட்பாளர்களும், மாகாணங்களுக்கு 12,695 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
  • 12 கோடியே 85 இலட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
  • மிகப் பெரிய எதிர்க்கட்சியான மற்றும் அதன் தலைவரான முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஒரு பெரிய அடக்குமுறை, தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது என்ற கவலையைத் தூண்டியுள்ளது.
  • பலுசிஸ்தான் மாகாணத்தில் வேட்பாளர்களின் அரசியல் அலுவலகங்கள் மீது புதன்கிழமை நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர்.

மொபைல் சேவைகள் நிறுத்தம்

நாடாளுமன்ற தேர்த்லுக்கான வாக்குப் பதிவுகள் ஆரம்பமாகவியுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை மேற்கோள் காட்டி நாடு முழுவதும் மொபைல் போன் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

“நாடு முழுவதும் மொபைல் சேவையை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் தேசிய மற்றும் மாகாண சட்டசபைகளுக்கு பாகிஸ்தானில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை 08 மணிக்கு ஆரம்பமான வாக்கெடுப்பு

பாக்கிஸ்தானின் நாடாளுமன்ற ஜனநாயகம் தேசிய சட்டமன்றம் மற்றும் மாகாண சட்டமன்றங்களில் உள்ள இடங்களுக்கு வாக்களிப்பதை உள்ளடக்கியது.

241 மில்லியன் மக்கள்தொகையில் 128 மில்லியன் பாகிஸ்தானியர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இன்று காலை 08 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப் பதிவு காலை 8 மணிக்கு (03:00 GMT) தொடங்கி மாலை 5 மணிக்கு (12:00 GMT) முடிவடையும்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகள்படி சில பகுதிகளில் வாக்குப்பதிவு நீட்டிக்கப்படலாம். மேலும் 65,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில், அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தபால் வழியில் தனது வாக்கை செலுத்தினார்.

Oruvan

வாக்காளர்கள் தங்கள் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள்

வாக்காளர்கள் தங்கள் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள். ஒன்று கூட்டாட்சி மற்றும் மற்றொன்று மாகாணம். சட்டமன்றத்திற்கு 5,121 வேட்பாளர்களும், மாகாணங்களுக்கு 12,695 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு கூடுதலாக 70 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய சட்டமன்றத்தில் அல்லது நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் 266 இடங்களைப் பெறுவதற்கு 44 அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன.

மும்முனை போட்டி

இந்த தேர்தலில் பல்வேறு வழக்குகளில் சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி (PTI), முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி (PML-N), பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இதில் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாகவும், பிலாவல் பூட்டோ-சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

பலுசிஸ்தான் குண்டுவெடிப்புகள்

முன்னதாக புதன்கிழமை தென்மேற்கு பாகிஸ்தான் பலுசிஸ்தான் பகுதியில் வேட்பாளர்களின் அலுவலகங்களை குறிவைத்து இரட்டை குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதன் விளைவாக குறைந்தது 28 நபர்கள் கொல்லப்பட்டதுடன், 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இஸ்லாமிய அரசுக் குழுவால் நடத்தப்பட்டதாக கூறப்பட்ட இந்தத் தாக்குதல்கள் அப்பகுதி முழுவதும் அதிர்ச்சி அலைகளை அனுப்பியுள்ளன. மேலும், இந்தத் தேர்தல்கள் பாகிஸ்தானின் 12 ஆவது பொதுத் தேர்தலைக் குறிவைத்து அரங்கேற்றப்பட்டது.

Oruvan

தேர்தல் தொடர்பான கவலைகள்

1947 இல் சுதந்திரம் பெற்றதில் இருந்து பாகிஸ்தான் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நேரடி இராணுவ ஆட்சியின் காலகட்டங்களை அனுபவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது நாட்டின் நிர்வாகத்தில் சிவிலியன் மற்றும் இராணுவ நிறுவனங்களுக்கு இடையிலான சிக்கலான தொடர்புகளை எடுத்துக்காட்டுகிறது.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் நிறுவனரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அரசியல்வாதியாக மாறிய முன்னாள் கிரிக்கெட் வீரர் இந்த தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராக முத்திரை குத்தப்பட்டுள்ளார்.

அவர் சைபர் வழக்கில் 10 ஆண்டுகளும், அரசு பரிசில்களை விற்பனை செய்த வழக்கில் 14 ஆண்டுகள் மற்றும் இஸ்லாம் மார்க்க நெறிமுறைகளுக்கு எதிரான திருமண வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.

மேலும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் ‘பேட்’ சின்னத்தை இரத்து செய்த பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் முடிவை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இந்த சவால்களுக்கு மத்தியில் இம்ரான் கானுக்கு எதிரான வழக்குகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்று அவரது கட்சியும் ஆதரவாளரக்ளும் விமர்சித்துள்ளனர்.

இவ்வாறான இம்ரான் கான் மற்றும் அவரது கட்சிக்கு எதிரான அடக்குமுறைகள் 12 ஆவது பாராளுமன்றத் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

Oruvan