த்ரிஷா வழக்கில் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்: வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

0
116

நடிகைகள் த்ரிஷா, குஷ்பூ ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்த உத்தரவிற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் தான் பேசிய முழு காணொளியையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, நடிகை திரிஷா, நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும் விளம்பர நோக்கத்திற்காக இந்த வழக்கு தொடர்பட்டதாக கூறி நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 இலட்சம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

பெப்ரவரி 7ம் திகதிக்கு வழக்கு ஒத்தி வைப்பு

இந்த வழக்கு இன்று நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அபராத தொகையை தனி நீதிபதி முன்பு ஒப்புக்கொண்டு கால அவகாசம் பெற்றுவிட்ட பின் எப்படி மேல்முறையீடு வழக்கு தொடர முடியும் என கேள்வி எழுப்பினார்கள்.

தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கவும் மறுப்பு தெரிவித்துவிட்டனர். இந்த உத்தரவை திரும்ப பெற கோரி தனி நீதிபதி முன் வலியுறுத்தலாம் என்று கூறி வழக்கு விசாரணை பெப்ரவரி 7ம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.