மரபணு சிகிச்சை மூலம் கேட்கும் திறனை பெற்ற காது கேளாத சிறார்கள்: சீன நிறுவன பரிசோதனை வெற்றி

0
127

பிறக்கும் போதே காது கேளாத குறையுடன் பிறந்த குழந்தைகளுக்கு கேட்கும் திறன் வழங்கும் மரபணு சிசிச்சையை சீன நிறுவனம் ஒன்று, சோதனை மூலம் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

இந்த பரிசோதனை சிகிச்சை முறையின் வெற்றி குறித்து மருத்துவ ஆய்வாளர்கள் நேற்று ஊடகங்களிடம் தகவல் வெளியிட்டுள்ளனர்.

காது கோளாத ஆறு சிறுவர்களுக்கு சோதனை முறையில் சிகிச்சை வழங்கப்பட்டதுடன் அவர்களில் ஐந்து சிறுவர்களுக்கு செவித்திறன் கிடைத்துள்ளளது. சிகிச்சை முடிந்து ஆறு மாதங்களில் அவர்களின் பேச்சு திறனிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

Refreshgene Therapeutics என்ற நிறுவனம் மேற்கொண்ட இந்த சிகிச்சை முறை குறித்த ஆய்வுக் கட்டுரை The Lancet சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

“இந்த ஆய்வு முடிவுகள் உண்மையில் விசேடமாக கூறக்கூடியவை. சிறார்களின் கேட்கும் திறனும் பேச்சுத் திறனும் அடுத்ததடுத்த வாரங்களில் வாரமும் வியப்பளிக்கும் வகையில் மேம்பட்டது” என ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் கண், காது மருத்துவ கல்விப் பிரிவினர் ஆய்வாளர் செங் யி சென் தெரிவித்துள்ளார்.

சோதனை சிகிச்சையில் கலந்துகொண்ட குழந்தைகள் அனைவருமே ‘Otoferlin’ எனும் மரபணுவில் ஏற்பட்ட மாற்றத்தால் பிறவியிலேயே காது கேளாதவர்களாக பிறந்துள்ளனர்.

மனிதர்கள் செவிமடுக்கும் ஒலிச் சமிக்ஞைகளை காதிலிருந்து மூளைக்குக் கொண்டுசெல்ல, ‘Otoferlin’ புரதம் சிறப்பாக செயற்படுவது அவசியம்.

‘Otoferlin’ மரபணுவைச் கொண்டு செல்லும் தீங்கு விளைவிக்காத கிருமி ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளின் காதின் உட்புறம் செலுத்தி இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சோதனையில் பங்குபெற்ற ஆறு சிறுவர்களில் 5 பேருக்கு கேட்கும் திறன் கிடைத்துள்ள நிலையில், ஆறாவது குழந்தைக்கு ஏன் காது கேட்கவில்லை என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை.

இந்த சிகிச்சை முறைக்கு குறுகியகாலத்திற்கான இலேசான பக்க விளைவுகள் மட்டுமே ஏற்படும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.