அயோத்தியில் நிறுவப்படவுள்ள இராமர் சிலை: முதல் முறையாக வெளியான முழுமையான புகைப்படம்

0
141

இந்தியாவில் அயோத்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இராமர் கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் மிகவும் பரபரப்பான முன்னெடுக்கப்படும் நிலையில் கோவிலில் நிறுவப்படவுள்ள இராமரின் முழு வடிவிலான சிலையின் புகைப்படங்கள் இன்று வெளியாகியுள்ளன.

எதிர்வரும் 22ஆம் திகதி இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், கர்நாடகாவின் புகழ்பெற்ற சிற்பி அருண் யோகிராஜ் தயாரித்த ராம்லாலா சிலை (குழந்தை வடிவிலான இராமர்) நிறுவப்பட்டுள்ளது.

கடந்த 17ஆம் திகதி இராமர் கோயிலின் கருவறைக்கு ராம்லாலா சிலை கொண்டு வரப்பட்டது. சிலை கொண்டு வரப்படும் முன் கருவறையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனையடுத்து 18ஆம் திகதி சிலை கருவறையில் நிறுவப்பட்டது.

இந்நிலையிலேயே, இராமர் சிலையின் முழு வடிவிலான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. ராம்லாலா சிலை பார்ப்பதற்கு அருமையாக உள்ளது. முகத்தில் இருக்கும் புன்னகை ராமரின் மென்மையையும் இனிமையையும் பறைசாற்றுவதாகவும் கூறப்படுகின்றது.

Oruvan

இந்தச் சிலையில் நம்பிக்கையும் ஆன்மீகமும் பிரதிபலிக்கின்றன. முதல் பார்வையிலேயே இராமர் பக்தர்களை ஈர்க்கிறது. இராமரின் தலையில் உள்ள திலகம் சனாதன தர்மத்தின் மகத்துவத்தைக் குறிப்பதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

சடங்குகள் எவ்வளவு காலம் நீடிக்கும்?

ராம்லாலாவுக்கான சடங்குகள் கடந்த 16ஆம் திகதி தொடங்கியது. ராம் மந்திர் அறக்கட்டளை அதிகாரிகளின் கூற்றுப்படி, சடங்குகள் ஜனவரி 21 வரை தொடரும் எனவும் சிலையின் ‘பிரான் பிரதிஷ்டை’க்கு தேவையான அனைத்து சடங்குகளும் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான் பிரதிஷ்தா நிகழ்ச்சி ஜனவரி 22ஆம் திகதி பகல் 12.20 மணிக்கு தொடங்கி மதியம் 1.00 மணிக்கு முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உத்திர பிரதேஷ முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் இந்த இராமர் சிலையை உருவாக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.