இலங்கை ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்குங்கள்: இலங்கை அரசிடம் பிரித்தானியா கோரிக்கை

0
141

இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கான சுயநிர்ணயத்தை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளதாக தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஷிபோர்ன் மெக்டொனாக் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களின் நண்பன் என கூறுவதில் நான் பெருமை கொள்கிறேன். இந்த தைத்திருநாளில் இங்குள்ள மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் தமிழர்கள் ஆற்றும் பங்குக்காக நான் நன்றி கூற விரும்புகிறேன்.

தமிழ் மக்களின் ஆதரவின்றி பிரித்தானியாவின் மிச்சம் மற்றும் மோர்டனுக்கான பாராளுமன்ற உறுப்பினராக என்னால் சேவையாற்ற முடியாது.

இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்களை நாம் அனைவரும் நன்கு அறிந்துள்ளோம். அத்துடன் நீதி மற்றும் பொறுப்புக் கூறலை கோரி தொடரும் போராட்டத்தையும் நாம் அறிந்துள்ளோம்.

லண்டன் வாழ் தமிழ் மக்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் போரில் உயிரிழந்தமை தொடர்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு நான் அறிந்து கொண்டேன்.

இந்த போர் நிறைவடைந்து தற்போது பல ஆண்டுகள் கடந்திருந்தாலும் என்ன மாறியிருக்கிறது? இது தொடர்பில் தொடர் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டாலும் இதுவரை எந்தவொரு முன்னேற்றத்தையும் எம்மால் காணமுடியவில்லை.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் ஒருவர் கூட இதுவரை மீண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை. அத்துடன் இந்த போர்க் குற்றங்களுக்கு காரணமான எவரும் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை தண்டிக்கப்படவில்லை.

இலங்கையில் பயங்கரவாத தடைசட்டத்தின் பாவனை நிறுத்தப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயநிர்ணயம் வழங்கப்படாவிட்டால் சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும்.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்கவும் இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்” என தெரிவித்தார்.